ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 8

நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் பால்கிரேவ் டேவி என்கிற ஆர்ச்சார்யா தாதா நிர்வானந்தா அவதூத் என்கிற பீட்டர் ஜான்சனைப் பற்றிப் பார்க்கலாமா?

இதுவரை விமான நிலையங்களில் பதிவானதாக அறியப்பட்ட வகையில் மொத்தம் 46 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தார் கிம் டேவி. மும்பை விமான நிலையத்தில் காணாமல் போனபோது வைத்திருந்த பாஸ்போர்ட் நியூஸிலாண்ட் நாட்டைச் சேர்ந்தது. கிம் டேவிக்கு ஆங்கிலம், இந்தி, பெங்காளி, உட்பட பல மொழிகளைப் பேசத் தெரியும்.

முதன் முதலில், கோபன்ஹேகனில் வங்கிப் பாதுகாப்பு வாகனத்தைக் கொள்ளையடித்த வழக்கில் பிடிபட்ட கிம் டேவி, போலீஸிடம் தப்பித்த போது பாதுகாப்பு வளையங்களை எளிதாக உடைக்கும் 'திரில்' பெற்றார். பிற்பாடு ஸ்வீடனில் இதே போன்ற ஒரு கொள்ளையை நகைக்கடை ஒன்றில் நடத்தி தப்பித்தார். பின் துரத்திய போலீஸால் கிம் டேவி போலி பாஸ்போர்ட்டை அடையாளமாகக் காட்டி வாடகைக்கு எடுத்த காரைத்தான் கைப்பற்ற முடிந்தது. பிடிபட்ட கூட்டாளி ஒருவன் சொன்ன வாக்குமூலம் போலீஸை அதிர்ச்சி அடையச் செய்தது. அது என்ன என்றால், ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை வளர்ப்பதற்காகவே இந்தக் கொள்ளை நடப்பதாகவும், மற்றவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனந்த மார்க்கம் இதை மறுத்தது. மேலும் பொய்ச் செய்தி வெளியிட்டதற்காக ஊடகங்களில் வழக்கும் தொடரப்பட்டது.

இதற்கிடையில் புருலியா விவகாரத்திற்குப் பிறகு, ஒரு சமயத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், பிளீச்சின் நண்பர் என்று சொல்லிக்கொண்ட எம்பி சர்.டெட்டி டெய்லர் என்பவர், டேவி நைரோபியில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவு அதிகாரிகளுடன் காணப்பட்டதாக தெரிவித்தார். சூடானின் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வேலைகளில் டேவி ஈடுபட்டிருந்தாகவும், அதன் காரணமாகவே அவரை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறைகள் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டினார்,

ஜான் கர்ராங் என்ற சூடானின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி (SPLA) எனப்படும் தென் சூடானின் கிறித்துவ தீவிரவாத அமைப்பின் (அப்பாடா.. இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்றே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்துப் போகட்டும்)கமாண்டரின் அரவணைப்பில் ஹோட்டல் சரினா மற்றும் ஸபாரி கிளப் ஆகிய ஹோட்டல்களில் வெகுகாலம் தங்கியிருந்ததாக அறியப்படுகிறது. மார்க்ஸிஸ்டுகள் மற்றும் இஸ்லாமிய அரசுகளை எதிர்த்து பல வருடங்களாக கார்டோம் நகரில் போரிட்டு வருகின்றனர் இந்த அமைப்பினர். இந்த SPLA அமைப்பிற்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்க இயலாத அந்த வல்லரசு கிம் டேவியைப் பயன்படுத்தி ஆயுத சப்ளை செய்யச் சொன்னது.

நாளடைவில் கிம் டேவிக்கு இந்த திருடன் போலீஸ் விளையாட்டு பிடிக்காமல் போனது. அப்படியென்றால் பணம் கொட்டும் மற்ற பிஸினஸ் எது என்று ஆராயத் தொடங்கினார். தங்கம் மற்றும் வைரம் தோண்டும் தொழிலில் திடீரென ஆர்வம் அதிகமானது.

ஹாங்காங்கில் ஹோவர்ஸ்டாக் இன்டர்நேஷனல் ட்ரேடிங் என்ற கம்பெனி ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஸப்ரா அசோசியேட்ஸ் என்ற புவியியல் நிறுவனத்தை அமர்த்தி தங்கம் கிடைக்குமா என்று தெற்குச் சூடானில் கபோய்டா (KAPOETA) என்ற இடத்தில் தேடச்சொன்னது. ஸப்ரா அசோசியேட்ஸ் தெற்கு சூடானில் மேற்படி கிறித்துவத் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து இடங்களில் 12 மில்லியன் அவுன்ஸ் தங்கம் கிடைக்கக்கூடிய பகுதிகளைக் இனம் கண்டது. அப்போதைய தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 350 டாலர் என்று வைத்துக் கொண்டால் கூட 4.2 பில்லியன் டாலர் பெறுமான சொத்து அது. SPLA அமைப்பிற்கு வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு அவுன்ஸிற்கும் ராயல்டி தந்து விடவேண்டும் என்பது ஒப்பந்தம்.

தங்கம் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சியில் ஆழ்ந்த கிம் டேவி, உடனேயே தங்கம் வெட்டியெடுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். தங்கத்தைப் பற்றிய வியாபார நுணுக்கங்கள், அதன் "தந்து முந்து"கள் தெரிந்திராத கிம் டேவி, தங்கத்தை வெட்டி எடுத்து சுத்தம் செய்து மார்க்கெட்டில் கொண்டு வந்து இறக்க இறக்க, சட சடவென தங்கம் விலை குறைந்தது. பதறிப்போன லண்டன் தங்க வர்த்தகர்கள் 'எவண்டா இவன்' என்று கண்டுபிடித்து, தங்களுக்குத் தெரிந்த உத்திகளைப் பயன்படுத்தி தெற்குச் சூடானில் கிம்டேவி தங்கம் தோண்டுவதை நிறுத்திவிட்டார்கள்.

பணம் சம்பாரித்த கை நிற்குமா?

மியான்மரில் ரூபி மற்றும் சபையர் என்கிற விலைமதிப்பு மிக்க கற்களைத் தோண்டி எடுப்பதில் ஆர்வம் போனது.

கிம் டேவிக்கு முறையான அரசுகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தை விட வன்முறையாளர்களிடமும், ஆயுதந்தாங்கி போராடுவோர்களிடமும், உளவுத்துறையினரிடமுமே நெருக்கம் அதிகம். ஆகவே இந்த மாதிரியான தொழிலுக்கும் அவர் அந்தமாதிரியான அமைப்புகளையே தேர்ந்தெடுத்தார். அப்படி ஒரு அமைப்புதான் K.I.A எனப்படும் கச்சின் இன்டிபெண்டன்ஸ் ஆர்மி. இந்தியா மற்றும் சைனாவை எல்லையாகக் கொண்ட மியான்மர் என அறியப்படும் பர்மாவின் ஆளும் இராணுவ அரசிடம் தனிநாடு கேட்டுப் போராடும் அமைப்பு அது. கச்சின் பகுதியில் தங்கம் உட்பட விலையுயர்ந்த கற்கள் அதிகமாக கிடைக்கிறது. முடிச்சுப் போட்டுப் பார்த்த கிம் டேவி உடனேயே அந்த அமைப்பின் தலைவரான மலிசு ஷாவ் மாய் என்பவரைத் தொடர்பு கொண்டார். மலிசு அப்போது தான் ஆளும் இராணுவ அரசிடம் ஒரு உச்சகட்டப் போரை நடத்தி இருந்தார். இந்த போருக்கு மியான்மரின் இராணுவ அரசிற்கு சைனாவின் ஆயுத உதவி வேறு. உடனே அந்த தீவிரவாத அமைப்பிற்கு சைனாவை எதிர்க்கும் முகமாக, வேறு சில நாடுகள் ஆயுதம் தர முன் வந்தன. நேரம் சரியாக இருந்தது. உளவு அமைப்புகளின் கண்களில் மண் தூவுவதற்காக ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பை முன் வைத்து இந்த ஆயுத பரிவர்த்தனை நாடகம் நடந்தேறியது. பின்னணியில் வேறு வல்லரசுகள் இருந்ததற்கான நிரூபிக்கப்படாத ஆதாரங்கள் இருந்தன. யார் யார் என்று சொல்வது சாலச் சிறந்ததல்ல.

சரி. கச்சினில் தரவேண்டிய ஆயுதம் எப்படி சரியாக ஆனந்த மார்க்கத்தின் தலைமையகம் இருக்கும் ஆனந்த்நகர் அருகில் (அப்படித்தான் சிபிஐ சொல்கிறது) கொண்டுபோய் போடப்பட்டது. இது திட்டமிட்ட நாடகமா? அல்லது தவறுதலாகவே போடப்பட்டதா என்பது தான் கேள்வி. இந்தக் கேள்விக்கு மறைந்து வாழும் கிம் டேவி தான் பதில் சொல்ல வேண்டும், உளவுத்துறைகளாலும் பீட்டர் பிளீச் மூலமும் அறியப்பட்ட வகையில் இது தவறுதலாகவே போடப்பட்டதாக அறிய முடிகிறது.

முதலில் டாக்காவில் இறங்கி பின் அங்கிருந்து கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் பறந்துபோய் ஆயுதங்களை பாராசூட் மூலம் இறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கச்சினின் கூரான மலைப்பகுதிக்குள் விமானங்கள் பறப்பது எளிதல்ல என்பதால் K.I.A விற்கு அந்தப் பகுதி சரியான மறைவிடமாக இருந்து வந்தது. டாக்காவிலிருந்து பறந்தால் கூரான மலைப்பகுதிகளுக்குள் தாழ்வாகச் செல்ல முடியும் என்பது கணக்கு. இதற்காக டாக்காவில் விமானம் தரையிறங்கும் அனுமதி வாங்கும் வேலையில் இருந்த கிம் டேவியின் கூட்டாளியால் ஏனோ அந்த அனுமதியை கடைசியில் வாங்க முடியாமல் போனது. எனவே டாக்காவில் இறங்காமலே பறந்துபோய் கச்சினில் ஆயுதங்களை இறக்குவதாக கிம் டேவி தீர்மானித்துக் கொண்டார். இந்தமாதிரியான ஆட்கள் பொதுவாக எவ்விதமான ஆபத்து வந்தாலும் மிகவும் நிதானமாக இருப்பார்கள். பதட்டமடைவது என்பது அவர்களுக்கு இருக்கவே இருக்காது.

விமானம் பறக்கும் வேகத்தை வைத்தும் பறக்க ஆரம்பித்த நேரத்தை வைத்தும் இத்தனையாவது நிமிடங்களில் ஆயுதம் போட்டாக வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்ட கிம் டேவி, துப்பாக்கி முனையில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே விமானிகளுக்கு ஆணையிட்டுக் கொண்டு வர, விமானிகள் அதற்கு பணியாமல் முரண்பட, ஏற்பட்ட குளறுபடிகளில் கச்சினில் விழ வேண்டிய ஆயுதங்கள் புருலியா மாவட்ட கிராமங்களில் போய்ச் சேர்ந்தது என்பதாக அறிய முடிகிறது.

இந்த விஷயத்தில் விடையளிக்க இயலாத பல மர்மங்கள் புதைந்திருக்கின்றன. அவிழ்க்க இயலாத அல்லது சம்பந்தப்பட்ட அரசுகள் அவிழ்க்க விரும்பாத எத்தனையோ மர்ம முடிச்சுகளுள் இவைகளும் அடங்கும்.

டென்மார்க்கில் கிம் டேவியைக் கண்டு பிடித்த சிபிஐ-யால் அப்போது குற்றவாளிகளைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் இல்லாததால் இந்தியாவிற்கு கைது செய்து கொண்டுவராமல் போனது. இண்டர்போல் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை இன்டர்போல் ஒரு சிவப்புமூலைக் கடிதம் வெளியிடப்பட்டதுடன் நிற்கிறது. இன்றுவரை கிம் டேவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறது இன்டர்போல்.

ரண்டி என அறியப்படும் சத்யநாராயண்சிங் மற்றும் அவரது தம்பியான வினய் சிங்கிற்கும் இந்த ஆயுதக் கடத்தலில் என்ன வகையிலான தொடர்பு என்பது சரியாக விளக்கப்படவில்லை.

பிரிட்டிஷ் உளவுத்துறை இந்தியஅரசிற்கு சரியான நேரத்தில் சொன்னதா, இல்லையா? இல்லையென்றால் என்ன காரணம்?

இந்திய மண்ணில் பலமுறை இறங்கிச் சென்றிருக்கிறதே அந்த விமானம். அந்தக் காலகட்டங்களில் ஒருமுறைகூட சோதனையிடப்படாமல் போனதன் காரணம் என்ன?

ஹாங்காங்கைச் சேர்ந்த தங்கக் கள்ளக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த, ஜெர்மனியில் பிறந்து கன்சாசில் வசித்து வந்த, அமெரிக்க குடிமகனான ப்ரோரென் என்பவரை, சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு வந்த போது இதே புருலியா விவகாரத்தில் இந்திய அரசு கைது செய்தது. இவர்தான் ஆயுதம் போட்ட ஆண்டனோவ் விமானம் வாங்குவதற்கான பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. அவர் ஷ்னீடர் மார்டின் கான்ராட் என்ற பெயரில் பயணம் செய்திருந்தார். இந்திய உளவுத்துறையின் விசாரணையில் அவரின் வேறு சில பெயர்களும் தெரியவந்தன.

அவரிடம் உங்களின் உண்மையான பெயர் என்ன என்று கேட்ட போது, அவர் சொன்ன பெயர் என்ன தெரியுமா?

ஹனுமான்.

'ஆண்ட'வனுக்குத் தான் வெளிச்சம்.

இனி..

ஆயுதம் என்பது இரகசியமாக வீட்டின் கொல்லைப்புறத்தில் தயாரிக்கப்படுவது அல்ல. அவை ஒரு தொழிற்சாலையிலேயேதான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் அரசிற்குத் தெரியாமல் இந்த ஆயுதங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிட முடியாது. அப்படியானால், இப்படி ஆயுதங்கள் கடைத்தெருவில் விற்கப்படும் அளவிற்கு (பெஷாவரில் ஆயுதம் விற்பதற்கனவே ஒரு பஜார் இருந்தது. அதைப் பற்றிய படங்களை ஒருமுறை இந்தியா டுடேயில் பார்த்ததாக நினைவு) கொண்டுவந்ததற்கு ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகளும் ஒரு காரணம். ஆயுதம் உற்பத்தி செய்யப்படும் நாடுகளையும் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் ஐநா சபையின் ஆயுதக்கட்டுபாடு தீர்மானங்களையும் இனி வரும் தொடர்களில் காணலாம்.

(பின் குறிப்பு)

ஆயுதக்கடத்தல் என்று வரும்போது அது அழகு பார்ப்பதற்காக வாங்கப்படுவதல்ல என்பது திண்ணம். அருகாமையிலேயே நமது சகோதரர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு எப்படி ஆயுதம் வந்து சேர்கிறது என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல. அதில் ஏகப்பட்ட சாகச சம்பவங்கள் அடக்கம். சாண்டில்யனின் கடல்புறாவின் பாதிப்பினை கேபி டிபார்ட்மெண்ட்டுக்குள் காணக் கிடைக்கலாம். அதைப்பற்றி இப்போதைக்கு எழுதுவதாக இல்லை என்று உத்தேசித்திருக்கிறேன்.

பொங்கல் வாழ்த்துக்களும் சில சிந்தனைகளும்

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

இன்று பொங்கல் திருநாள்.

பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கட்டுக்கட்டாக வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தபாலில் அனுப்பிய ஞாபகம் ஏனோ வந்தது.

அதிகாலைக் குளிரில் குளிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே போய் ராசுப்பயல் என்னை வலுக்காட்டி தள்ளிவிட, நடுங்கிக்கொண்டே குளத்தில் போய்க்குளித்து, புதுத்துணியுடுத்தி, காலையிலேயே விறகடுப்பின் புகையின் கண்ணெரிச்சலுக்கிடையில், சூரியனை வானில் தேடி, பொங்கலோ பொங்கல் கூவி, கடவுளுக்குப்படைத்து, இனிப்பான புதுஅரிசியின் வாசனையுடன் இருக்கும் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டு, பிறகு வீடுவீடாக பொங்கலைக் கொடுத்துவர என் அம்மா, இது இது இன்னாருக்கு என்று சொல்லித்தர வீடு வீடாய்ப் போய்க் கொடுத்துவருவேன். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது தருவார்கள். பழம், காய்கறி, காசு, இனிப்பு என்று, ஒரே வசூல்தான் அன்றைக்கு. அன்றைக்குப் பார்த்து காலையில் இந்தச் சூரியன் பத்துமணி வரை தலையைக் காட்டாது. ஒரே மப்பும் மந்தாரமுமாய் இருக்கும், வீதியெங்கும் புகை. புதுத்துணியுடுத்திய பெண்கள் அன்று மட்டும் அதிகமாய் அழகாய்த் தெரிவதும் அவர்களை சடையைப் பிடித்து வம்பிழுப்பதும் தனிக்கதை.

இன்றைக்கு சிங்கப்பூரில் ஒரு உள்ளரங்கத்திலோ அல்லது கோயிலிலோ (தமிழர் திருநாள் இங்கு இந்துக்களின் பண்டிகையாய்ப் போனது) பொங்கல் கொண்டாடப்படும். தத்தம் பிள்ளைகளும் தாமும் பளபளக்கும் பட்டுடைகளில், மெர்சிடஸிலோ அல்லது லெக்ஸஸிலோ வரும் தமிழர்கள் கோயிலில் பக்திசிரத்தையாய் கும்பிட்டுவிட்டு பிள்ளைகளை பொங்கல் பொங்குவதைக் காட்டச் செல்வர். அதன்பின், மாடுகள் எல்லாம் ஒரு கொட்டகையில் வரிசையாகக் கட்டப்பட்டு அங்கு பால்கறக்கும் நேரம் முதலானவை எழுதப்பட்டிருக்கும். (இன்னமும் அதற்கு தனியாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது சந்தோசம்.) மாடுகள் இந்த நிகழ்ச்சிக்காகவே ஜோஹோரிலோ அல்லது லிம்-ச்சு-காங்கிலோ உள்ள ஒரு பண்ணையில் இருந்து தற்காலிகமாக வாடகைக்கு எடுத்துவரப்படும். மாடுகள் மட்டுமின்றி சமூக விலங்குகள் என அழைக்கப்படும் ஆடு, மாடு, எருமை, கோழி, சேவல், நாய்கள், கிளிகள் போன்றவற்றிற்கும் சிங்கப்பூர் பிள்ளைகளுக்கும் வெகு தூரம். (நாய் மற்றும் கிளி ஆகியன வளர்க்க அரசிடம் பணம் கட்டி சில நடைமுறைகளுக்குட்பட்டு வீட்டில் வளர்க்கலாம்.) எனவே மாட்டுப்பொங்கல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றையக் குழந்தைகளுக்கு மாட்டைக் காட்டுவதற்கும் அதில் எப்படி அவர்கள் தினம் குடிக்கும் பால் வருகிறது என்று காண்பிப்பதற்கும் இந்த மாட்டுக் கண்காட்சி உபயோகப் படுகிறது. மாடுகள் லிட்டில் இந்தியா சாலைகளில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது இந்த முறை.

===================

என் மகள் கேட்டாள், அரிசி எப்படி விளைகிறது என்று. அவளுக்கு அது புல் வகையைச் சேர்ந்தது என்று தெரிந்திருக்கிறது. மற்றபடி ஒவ்வொரு புல்லாக வளர்த்து அரிசி செய்வார்களா என்று கேட்க, எனக்கு அப்போது தான் உறைத்தது. மடைபாய்ச்சுவதிலிருந்து, உழுது, பாத்திகட்டி, நாட்டுநற்று, களையெடுத்து, உரம்வீசி, காவலுக்குச் சென்று, கதிரறுத்து, கதிரடித்து, மரக்காலில் அளந்து, மூட்டைகட்டி, காயவைத்து, குதிரில் இட்டு, அவியல்போட்டு ஆறவைத்து, ஆலைக்குத் தூக்கி, அங்கு அரைத்து, உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக, குருணை தனியாகக் கட்டிப் பின் வீட்டுக்குக் கொண்டு வந்து, பானைக்குள் அளந்து கொட்டி முடிக்கும் வரை செய்திருந்த எனக்கு என் 6 வயது மகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மலைப்பாய் இருந்தது. எதையோ தேடப்போய் எதையோ இழந்துவிட்டோமோ என்று ஒருகணம் உலுக்கியது. சமூக பொருளாதார மாற்றங்கள் கலாச்சாரத்திற்குள் எப்படி மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்று உணர்வதற்கு அது தருணமாய் இருந்தது.

=========================

காடுகரையை எல்லாம் விற்றுவிட்டு இன்று இரண்டு ருபாய்க்கு ரேசனில் அரிசிவாங்கிக் கொண்டிருக்கிறான் விவசாயி. இலவசமாக மின்சாரம் வருமா, இலவசமாக கிணறு தோண்டித்தருவார்களா, இலவசமாக உழுது தருவார்களா, இலவசமாக உரம் தருவார்களா, இலவசமாக களை எடுத்துத் தருவார்களா, இலவசமாக கதிரறுத்துத் தருவார்களா என்றெல்லாம் இலவச எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்க, இரண்டு ருபாயில் அரிசியையே வழங்கி ஏகப்பட்ட வாக்குறுதிகளை மிச்சப்படுத்தியிருக்கும் கலைஞர் அவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது, ஆனால் இனி விவசாயி என்பவன் ஒருவன் இருக்காமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அத்தனையும் இருக்கிறது, வியட்நாமிலோ அல்லது தென் கொரியாவிலோ அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம். அவர்கள் அரிசியை இரண்டு ருபாய்க்கும் குறைத்து அரசிற்கு விற்க விரும்பினால் வாங்கித்தானே ஆக வேண்டும். அதுதானே உலக வர்த்தகமயமாக்கல். அதே சமயம் இது வேறு வகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வேலைக்கு ஆட்கள் இன்று கிராமத்தில் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலைக்குப் போனால் குறைந்தது நூறு ருபாய் கூலியாய்க் கிடைக்கிறது. 25 கிலோ அரிசி வாங்கினால் ஒரு மாதத்திற்கு போதும். காய்கறி வாங்க அவ்வப்போது ஒரு நாள் வேலை பார்த்தால் போதும். எதற்கு வேலை பார்ப்பது. குதிரில் நெல் இருந்தால் போதும் டீக்கடைக்கு அரசியல் பேச போய்விடுவானே தமிழன். வேலையாவது மண்ணாங்கட்டியாவது.

==============================

காடுதிருத்தி கழனியெல்லாம் பாடுபட்டு விளைச்சலை வீட்டுக்கு கொண்டுவந்து பகலவனுக்குப் படைத்து நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். இதில் மதமும் இல்லை, சாதியும் இல்லை. தமிழராய்ப் பிறந்தோர் எல்லோரும் கொண்டாடி மகிழ வேண்டிய பெருநாள், பொங்கலை ஆக்கி பாத்தியா ஒதும் இஸ்லாமியக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், காகிதத்தட்டுக்களில் பொங்கலைப் பகிர்ந்துண்ணத் தரும் கிறித்துவக் குடும்பங்களைக் கண்டிருக்கிறேன், ஆனால் இன்றைக்கு பொங்கல் என்ற தமிழர் திருவிழா, தீபாவளி என்ற பளபளக்கும், நொடியில் கரைந்துபோகும் வடநாட்டு திருவிழாவின் வெளிச்சத்திற்கு முன் தாழ்ந்து போனது, பாலகங்காதர திலகர் இதைப் பிரபலப்படுத்தும் வரை இது அஷ்டமி நவமி போன்றதொரு மற்றொரு நிகழ்வாகவே இருந்திருக்கிறது,

பொங்கலைப்பற்றி எழுதும்போது இது இங்குமட்டும் தான் வழக்கமா என்ற வழக்கமான ஒரு கேள்வி எனக்குள் எழ, கூகிளப்பனைக் கேட்டால் உலகெங்கும் கொண்டாடுப்படுகிற வழக்கம் என்ற புதுத்தகவல் (எனக்கு) கிடைத்தது,

Thanks Giving Day என்று வடஅமெரிக்காவிலும், லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும், Moon Festival என்று சீனர்களிடத்திலும், Tet Trung Thu என்று வியட்நாமிலும், Succoth என்று யூதர்களிடத்திலும், Kwansa மற்றும் Yam என்று ஆப்பிரிக்கர்களிடேயும், Chusok என்று கொரியர்களிடேயும், இது போக பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது, அமெரிக்காவிலும் கனடாவிலும் இது மதம் சாராத பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், லண்டனில் இது சர்ச் சார்ந்த பண்டிகையாக கடந்த ஒரிரு நூற்றாண்டுகளில் மாற்றப்பட்டிருக்கிறது.

=============================

இன்றைக்குப் பொங்கல் கொண்டாட்டமென்றால் தமிழ்கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகர்களும் நாயகிகளும் சன்டிவியில் தோன்றி வரும் காட்சிகளை வீட்டில் அமர்ந்து ரசிப்பதும், பொங்கலுக்கு வெளியாகும் புதுப்படங்களைப் பார்ப்பதிலும் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க தமிழர், வாழ்க அவர்தம் புதிய கலாச்சாரம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 7

பிற்பாடு பிளீச்சின் டேனி்ஷ் நண்பரும் அவரும், துபாய் போய் பின் அங்கிருந்து டாக்கா சென்றனர். பின்பு அங்கிருந்து கிம் டேவியைச் சந்திக்க பாங்காக் போனார்கள். போகும் வழியில் கிம் டேவியைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் அந்த டேனிஷ் நண்பர். இதே விஷயத்தை முடிக்க டேனிஷ் பிஸினஸ்மேன் ஒருவர் 600,000 டாலர் பேசி 150,000 டாலர் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் ஆனால் தனது பராக்கிரமத்தால் அந்த காண்ட்ராக்டை பிளீச்சிற்குப் பெற்றுத்தந்ததாகவும் பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டிருந்தார். கிம் டேவி ஹாங்காங்கில் தங்கக் கடத்தலிலும் எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தலிலும் பெரிய கிங் என்றும் பெருமைபாடிக்கொண்டிருந்தார். பேச்சோடு பேச்சாக இந்த ஆபரேஷன் டேவியின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் என்றும் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொன்னார்.

பாங்காக்கில் ஒரு இரவு விருந்தில் கிம் டேவி, டேவியின் வக்கீல், டேவியின் தொழில் பார்ட்னர், பிளீச், அவரது டேனிஷ் நண்பர், மற்றும் ராண்டி என்று தன்னை அழைத்துக்கொண்ட இந்தியர் ஒருவரும் கலந்து கொண்டனர். கிம் தனது திட்டத்தைப் பற்றி விவாதிக்கலானார். மேற்கு வங்கம் வரை கப்பலில் கொண்டு சென்று அங்கிருந்து புருலியாவிற்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லலாமே என்று சொன்னார். அது மிகவும் ரிஸ்க்கான காரியம் என்றும் ஒரு விமானத்தை தற்காலிகமாக விலைக்கு வாங்கி அதைக் கொண்டு அந்த ஆயுதங்களை ஆகாய மார்க்கமாகவே டெலிவரி செய்து விட்டு பிறகு வந்த விலைக்கு அந்த விமானத்தை விற்று விடலாம் என்றும் பிளீச் யோசனை சொல்ல அது ஏற்கப்பட்டது. மேலும் டேவி அந்த விமானத்தை விற்காமல் டாக்காவிலேயே நிறுத்திவைத்துக் கொண்டு வேறு பல சாதாரண வியாபார விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று சொன்னார்.

இந்த ஆலோசனையின்படி டேவி 250,000 டாலர் கொடுத்து ஒரு ஆன்டனோவ் 26 (AH26) ரக விமானம் ஒன்றை வாங்கி ஏஎச்266 என்று நாமகரணம் சூட்டப்பட்டு ஹாங்காங்கில் டேவியால் பதிவு செய்யப்பட்ட கரோல் ஏர் சர்வீஸஸ் என்ற கம்பெனிக்கு அது மாற்றப்பட்டது. பிற்பாடு அதே விமானம் துருக்கியிலும் கைகோஸ் தீவுகளிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த விமானத்தைக் காண்ட்ராக்டில் ஓட்டுவதற்கு விமானச் சிப்பந்திகளாக லாட்விய நாட்டு ஐவர் குழு ஒன்று 30,000 டாலர்களுக்கு முன் வந்தது. அவர்களுக்குச் சொல்லப்பட்டதெல்லாம் இந்தச் சரக்கு விமானத்தை மூன்று மாதகாலங்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு ஓட்டிச் செல்ல ஒரு ஒப்பந்தம். ஆயுதக்கடத்தலெல்லாம் அவர்களுக்கு சுத்தமாக அப்போது தெரியாது. காண்ட்ராக்ட் பேசி முடிக்கப்பட்டவுடன் ரிகா என்ற லாட்விய நாட்டு நகரமொன்றின் விமானத் தளத்தில் அந்த விமானம் டெலிவரி செய்யப்பட்டு ஐவர் குழுவின் தலைவரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டது.

லண்டன் திரும்பிய பின் மீண்டும் சிரத்தையாக பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் மேற்கொண்டு தகவல்களை அளித்துவிட்டு பிடிஐ (Border Technologies and Innovations) என்ற கம்பெனியை நாடினார், பிளீச். அந்தக் கம்பெனி பல நாடுகளின் இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் செய்வதில் அனுபவம் பெற்றிருந்தது. பிளீச் பங்களாதேஷ் இராணுவ அமைச்சின் முத்திரையுடன் கூடிய ஒரு தபாலை பிடிஐ நி்றுவனத்திடம் அளித்து, இது முறையான ஒரு வியாபாரம்போலக் காட்டியிருந்தார். இதைப் பெறுவதற்காகத்தான் அவர் முன்னம் டாக்கா போய்வந்திருக்க வேண்டும். பிடிஐ நிறுவனம் பல்கேரிய நிறுவனம் ஒன்றிடம் ஆர்டர் அளித்திருந்தது. பிடிஐ நிறுவனம் கொடுத்த பட்டியலின் படி அனைத்தையும் தந்துவிட்டு, பாராசூட் மட்டும் தன்னிடம் இல்லை என்று கைவிரித்து விட்டது. அதுவே ஒரு வகையில் நல்லதாகப் போனது, டேவிக்கு. ஏனென்றால் லாட்விய விமானக்குழுவிற்கு கள்ளிப் பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் போனது.

10 டிசம்பர் 1995. பல்கேரியாவின் பர்காஸ் நகரில் 'சரக்குகளை' பெறுவதற்காக ஆண்டனோவ் 26 தரையிறங்கியது. இதற்கு சற்று முன்பாக பர்காஸிற்கு பிளீச் கிளம்பும் முன் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி ஒருவர் GATWICK விமானநிலையத்தில் சந்தித்து அவரது பயணத்தைத் தொடரும்படியும் தமது அமைப்பு இதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சரியான சமயத்தில் தலையிட்டு இதைத் தடுத்துவிடுவோம் என்றும் கூறியதாக் பிளீச் தெரிவிக்கிறார். பிளீச் அந்த விமானத்தில் சரக்கை ஏற்றிவிட்டு லண்டன் திரும்பும் நோக்கத்தோடு பர்காஸ் சென்றார். ஆனால் நடந்ததோ வேறு. அங்கு திடீர் விஜயம் செய்த டேவி, பிளீச்சை தன்னுடன் விமானத்தில் பயணிக்கும்படி சொன்னார். இந்த விமானப் பயணம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருந்த பிளீச் இந்தப் பயணம் முடியும் வரை கூடவே இருக்க வேண்டும் என்று டேவி வற்புறுத்தினார். பின்னர் அது மிரட்டலாக உருமாறியது. மறுத்த பிளீச்சை டேவி 'குடும்பத்தையே தொலைத்துவிடுவேன்' என்று மிரட்ட ஆரம்பிக்க வேறு வழியின்றி பிளீச் அதே விமானத்தில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.


Technical Equipments - Central Ordinance Depot, Rajendrapur Cantoment, Bangaladesh
என்று எழுதப்பட்டிருந்த கள்ளிப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் பர்காஸிலிருந்து கராச்சி நோக்கிப் பறந்தது. அதுவரை இந்தக் கள்ளிப்பெட்டிகள் இராணுவத்திற்கான தளவாடங்களை ரிப்பேர் செய்வது சம்பந்தமான உபகரணங்கள் என்றுதான் விமானிகள் நம்பிக்கொண்டிருந்தனர். கராச்சியில் பாராசூட்டுகள் அந்தக் கள்ளிப்பெட்டியில் இணைக்கப்படும் போது விமானிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் பயம், கள்ளிப் பெட்டிகள் தரையிறங்கும் வரை நீடித்தது. 17 டிசம்பர் கராச்சியிலிருந்து ரங்கூன் நோக்கிப் பறந்த அந்த விமானம் மேற்கு வங்காளம் வாரணாசிக்கருகில் வரும்போது போதிய எரிபொருள் இல்லாமல் தகராறு செய்ய, வாரணாசி விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டார்கள். பிளீச்சிற்கு ஆச்சரியமோ ஆச்சரியம். என்ன இந்த இந்திய அதிகாரிகள் யாரும் வந்து விமானத்தைச் சோதனை செய்யவுமில்லை, கைது செய்யவுமில்லை என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் பிரிட்டிஷ் உளவுத்துறை இந்திய அரசிற்கு இந்நேரம் சொல்லி அவர்கள் இந்த விமானத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

எரிபொருள் நிரப்பிய விமானம் ரங்கூன் நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ஆனால் மேற்கு வங்கத்தின் கயா நகருக்குமேல் பறக்கத் தொடங்கும் போது துப்பாக்கி முனையில் விமானிகளை மிரட்டி தாழப்பறக்கும் படி செய்து பாராசூட் மூலம் கள்ளிப் பெட்டிகளை இறக்க முனைந்தார் டேவி. விமானிகள் தவறான செய்கைக்கு உடன்படுகிறோமே என்ற பயத்தால் முரண்டு பிடித்ததாலும், தென்ஆப்பிரிக்காவில் வாங்கி கராச்சியில் டெலிவரி எடுத்திருந்த மூன்றாந்தர பாராசூட்கள் சரியாக விரியாததாலும் குறி தவறி ஆயுதங்கள் விழத்துவங்கின. வியர்த்து வழியத்துவங்கியிருந்த விமானிகளை ஆசுவாசப்படுத்தி ரங்கூன் நோக்கி சென்றால், அங்கும் இறங்க முடியவில்லை. போதிய விளக்கு வசதிகள் இல்லாததால் இறங்க சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட வேறு வழியின்றி அந்த இரவு நேரத்தில் கல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டது. துப்பாக்கி முனையிலிருந்த பிளீச் "போலீஸ், இப்போதாவது நீ வரக்கூடாதா?" என்று தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக யாரும் வராமல் போக, அந்த ஆயுதக் கடத்தல் விமானம் தாய்லாந்தின் புக்கெட் நகர் நோக்கிப் பறந்தது.

21 டிசம்பர் 1995. தாய்லாந்திலிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கிய விமானம் கல்கத்தா வழியாக கராச்சி நோக்கி் பறக்க, கல்கத்தா வானிலை சரியில்லாத காரணத்தால் சென்னைக்கு வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு கராச்சி நோக்கிப் பறக்கத் தொடங்கியது. இன்னும் இரண்டு மணிநேரங்களில் கராச்சியில் இறங்கிவிடக் கூடிய தூரத்தில் இருக்கும் போது மும்பை விமான நிலையக் கட்டுபாட்டறையிலிருந்து வந்த ஒரு எச்சரிக்கை அந்த விமானத்தை திரும்ப மும்பைக்கு வரவைத்தது. மும்பை சாகர் விமான நிலையத்தில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது அந்த விமானம். இந்திய விசாரணை அதிகாரிகள் வருவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆனது. துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டிவிட்டு யாரிடமோ தனது போனில் பேசியபின், அதிகாரிகள் வருவதற்கு முன் கீழிறங்கிய கிம் டேவி விமான நிலைய அரைகுறை வெளிச்சந்திலிருந்து நடந்துபோய் இருட்டுக்குள் கரைந்து போனார்.

ஐந்து லாட்விய விமானச் சிப்பந்திகளும் பிளீச்சும் 22 டிசம்பர் 1995 அன்று கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இதில் சில வழக்கமான காமெடிகள் எல்லாம் இருந்தது. அதை இங்கு விளக்கி நம் பெருமையை நாமே பறைசாற்றிக் கொள்ளக் கூடாது அல்லவா. ஆறுபேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராண்டி என்றழைக்கப்படும் சத்யேந்தர் நாராயண் சிங்கின் தம்பியாகிய வினய் குமார் சிங் என்ற இந்தியருக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த வினய் குமார் சிங் மேற்படி சரக்குகளைப் பெற காத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அனைத்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பினரும் பிற்பாடு இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். ஆனால் குற்றம் சரிவர நிருபிக்கப்படாமல் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உண்மையில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பு பொய்யாக இந்த வலைக்குள் சிக்கியிருந்தது என்பதைபின்னர் கண்டுபிடித்தனர்.

ஆயுதக்கடத்தலில் பணம் சம்பாரிக்கலாம் என்று வந்த பிளீச் இந்தியச் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருந்தார். அதிலிருந்து வெளியே வர அவர் பகீரதப் பிரயத்தனம் பண்ணி கடைசியல் வெளியில் வந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இதுவரை மேற்படி சொன்னதெல்லாம் பிளீச் வாக்குமூலமாகச் சொல்லப்பட்டு பிரிட்டிஷ் உளவுத்துறையால் ஆமோதிக்கப்பட்ட கதை.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன...?

எப்போதும் ஒரு நாணயத்திற்கு இருபக்கம் உள்ளது அல்லவா... அந்த மறுபக்கம் என்ன?

ஆனந்தமார்க்கம் என்ற அமைப்பிற்கு ஆயுதங்கள் தரப்படுவதாக பிளீச் மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஏன் பொய் சொல்லப்பட்டது.

மேலும்...

சாகர் விமானநிலையத்தில் மாயமாகி இன்றுவரை கண்ணில் படாத கிம் டேவி என்ற சூத்திரதாரியையும், அவனின் பிண்ணனி என்ன என்பதையும் சற்று விளக்கமாக அடுத்த பகுதியில் காணுவோம்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 6

புருலியா ஆயுதமழை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் முக்கியமாக இருவர். பீட்டர் பிளீச் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றும் கிம் டேவி எனப்படும் மற்றொரு நபர். பீட்டர் பிளீச் எவ்வாறு இந்த கிம் டேவியுடன் தொடர்புகொண்டு கிம் டேவியின் வலைக்குள் சிக்கி கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் ஆயுதத்தூவலைச் செய்தார் என்று பார்ப்போம் (அப்படித்தான் பிரிட்டிஷ் உளவுத்துறை சொல்கிறது).

முதலில் பீட்டர் பிளீச்.

பீட்டர் வான் கால்கெஸ்டீன் பிளீச் (Peter von Kalkstein-Bleach), பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறையில் கார்ப்பொரல் பதவியில் 20 வருடங்கள் பணியாற்றிய பின், பணம்கொட்டும், அதே சமயம் மிகச் சாதுரியம் தேவைப்படும், ஆயுதக் கடத்தல் தொழில் செய்வது என்று முடிவு செய்திருந்தார். இந்தத்தொழில் ஏகப்பட்ட பேப்பர் வேலைகள் இருக்கும் மற்றபடி ஆயுதம் வாங்குவதோ அதைக் கொண்டுபோய் இறக்குவதோ ஒரு விஷயமே கிடையாது என்று நினைத்திருந்தார். இந்த நினைப்பு எவ்வளவு தவறhனது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தத் தொழிலுக்காக பிள்ளையார் சுழி போட்டு ஏரோசர்வ் என்ற கம்பெனியை பிரிட்டிஷ் இராணுவ அமைச்சிடம் முறையாக அனுமதி பெற்று பதிவு செய்திருந்தார்.

ஆகஸ்ட் 1995 வாக்கில் பிளீச் ஒரு தொழில் முறைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோபன்ஹேகன் சென்றிருந்தார். தமது முனிச் நகரைச் சேர்ந்த நண்பரொருவரைப் சந்திக்க நேர்ந்தது. ஒரு முக்கியமான விஷயத்திற்காக கூட்டிப்போவதாகச் சொல்லி அவரை பண்ணை வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அங்கு கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு வர்த்தகர், மற்றும் அவரது இரு நண்பர்கள், ஒரு டென்மார்க் நாட்டுக்காரர் மேலும் ஒரு அறிமுகப்படுத்தி வைக்காத நிழல் நபர். அந்த நிழல் நபர் பெரும்பாலும் எதுவும் பேசவில்லை. சிகரட் வியாபாரம் பற்றி வெகுநேரம் பேசியபின், அந்த நிழல்நபரைத் தனியே கலந்தாலோசித்துவிட்டு பிளீச்சிடம் அந்த கோபன்ஹேகன் நபர் விஷயத்திற்கு வந்தார். 2500 ஏகே47 ரக துப்பாக்கிகளையும் 1.5 மில்லியன் துப்பாக்கிக் குண்டுகளையும் ஒரு நபருக்கு அனுப்ப வேண்டும் என்று நேரடியாகச் சொன்னார். ஆயுதக் கடத்தல் விவகாரத்தில் பொதுவாக இது யாருக்குப் போகிறது என்று விசாரிக்கப்படுவது வழக்கமில்லை. மேலும் இந்திய நகரான கல்கத்தாவிற்குப் போவதால் அது இந்திய அரசிற்காகக் கூட இருக்கலாம் என்று நினைத்திருந்தார்.

அந்த தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிராத நிழல் நபர், பிளீச் இந்த விஷயத்திற்கு ஒத்துக் கொண்டவுடன், ஒரு பெரிய வரைபடத்தை விரித்து மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கிராமத்தை விரலால் வட்டமிட்டு இங்குதான் இது செல்ல வேண்டும் என்றபோதுதான் அவருக்கு சுரீரென்று உரைத்தது. இது தீவிரவாதக் கும்பலுக்குச் செல்லுகிறது என்று. உடனே மனதிற்குள் இதை பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் தெரிவித்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும், வந்தவரை காசு என்றும், நினைத்துக் கொண்டார். அந்த நிழல் நபர் தொடர்ந்தார். தனது அமைதி விரும்பும் மக்களை மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு கொடுமைப் படுத்துவதாகவும் கொன்று குவிப்பதாகவும் அதற்காகவே இந்த ஆயுதங்கள் செல்வதாகவும் சொன்னார். பிளீச் தனது வியாபாரத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த டெலிவரி ஒன்று பாராசூட் மூலமாகவோ அல்லது இரகசியமாக தரையிறங்கியோதான் செய்யமுடியும் என்றும், கடைசிவரை இந்த பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு விமானியைத் தவிர, வேறு யாருக்கும் டெலிவரி செய்வது இந்த இடம் என்று ஒருபோதும் தெரியக்கூடாது என்றெல்லாம் ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தார்.

கடமை சுத்தமாக லண்டன் திரும்பிய பிளீச் பிரிட்டிஷ் இராணுவ அமைச்சின் DESO என்ற அமைப்பைத் தொடர்புகொண்டு ஒன்று விடாமல் வரி பிசகாமல் ஒப்பித்தார். அப்போதைய அதிகாரியான ஆல்கின்ஸ் என்பவர் (இவரே அப்போதைய இந்தியாவிற்கான விவகாரங்களைக் கவனித்தவரும் ஆவார்) பிளீச்சிடம் தொடரந்து அதில் ஈடுபடும்படியாகவும் மேலும் தகவல்களை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும்படியும் ஆலோசனை கூறினார். தாம் டென்மார்க் மற்றும் இந்திய அரசுகளிடம் இதைப் பற்றி தெரிவித்து விடுவதாகவும். மேலும் அந்த திட்டப்படி ஆயுதங்கள் போடப்பட்டால் அதை எடுத்துச் செல்பவர் வரை பிடித்து விடுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் அவரைத் தொடரச் சொல்லியிருந்தனர். நம்பிக்கையுடன் திரும்பிய பிளீச் 470,000 டாலர்கள் என்று கொடேஷன் கொடுக்கிறார். சாதாரண தொழில்முறைப் பயணமாக பங்களாதேஷ் சென்றிருந்த பிளீச்சிற்கு பங்களாதேஷிற்கு ஒரு லெட்டர் ஆப் கிரெடிட் பேக்ஸில் வந்தது. அதில் 470,000 டெபாஸிட் செய்ததற்கான விபரங்களிருந்தன். கீழே கிம் டேவி என்று கையெழுத்திட்டிருந்தது. இது தான் அந்த நிழல் நபரின் பெயர் போலிருக்கிறது என்று பிளீச் நினைத்துக் கொண்டார்.

லண்டன் திரும்பிய பிளீச் தற்போது மீண்டும் உளவுத்துறையைச் சந்தித்து அவர்களிடம் கூடுதல் தகவல்களைத் தெரிவித்தார். தற்போது அந்த அதிகாரிகளில் ஒருவர் பிளீச்சை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார். அதிர்ச்சியடைந்த பிளீச், தான் இதில் ஈடுபட்டிருப்பது பணம் சம்பாதிக்க மட்டுமே. எனவே தான் பணத்தைப் பெற்றுக் கொண்டபின் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் தெரிகிறது. உளவுத்துறை இதை மறுக்க, பிளீச் இதை ஆமோதிக்க, உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.

ஆக உளவுத்துறையின் எச்சரிக்கைக்குப் பிறகும் பிளீச் இதில் ஈடுபட்டார். ஆனாலும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் இது சம்பந்தப்பட்ட செய்திகளை இந்திய உளவுத்துறைக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நவம்பர் 1995 வரை, அதாவது ஆயுதம் போடப்படும் ஒருமாதம் முன்பு வரை, அது இந்திய அரசின் காதுகளுக்கே போகவில்லை.