சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?

சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் அமெரிக்க தனது கோர முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இந்த முடிவை விரும்பவில்லையென்றாலும் அமெரிக்க ஜனாதிபதியாய் இருப்பவர், அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர், எடுக்கும் ஒரு முடிவு அந்த நாட்டினர் எடுத்த முடிவாகத்தான் கருத முடியும்.

ஈராக் நாட்டின் ஜனாதிபதியாய் இருபத்திநாலு ஆண்டுகள் இருந்தவர் சதாம் உசேன். ஓபெக் என்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பில் அங்கத்தினராக இருந்துகொண்டு அமெரிக்காவிற்குப் பணியாமல் இருந்ததற்கான தண்டனையைத்தான் தற்போது அவர் அடைந்திருக்கிறhர்.

ஈராக் குவைத்தில் ஊடுருவியதற்கே அமெரிக்காவின் தூண்டுதல்தான் காரணம் என்ற ஒரு மறைமுகக் குற்றச்சாட்டு உண்டு. ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்காவினுடதாக்கவும், இஸ்ரேலிற்கு அருகிலிருந்த பலமான எதிரியை ஒழிப்பதற்கும் அமெரிக்கா இப்படி ஒரு நாடகத்தை ஏற்படுத்தியது என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பு. எதிரியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டதன்பேரில் சதாமை வெல்லமுடியாமல் போனது.

அப்போதைய அமெரிக்கத்திட்டமாக (2001-ல), அரசியல் நோக்கர்கள் முன்வைத்தது இதைத்தான்

1. ஈராக்கை கையகப்படுத்தி சதாமைக் கொலைசெய்துவிட்டு அமெரிக்க இராணுவ ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டிலோ.. அல்லது ஒரு பொம்மை அரசின் கையிலோ கொடுத்து வைப்பது.

2. ஈராக்கை இப்படி நிர்மூலமாக்குவதன் மூலம் ஏனைய அரபு நாடுகளை பயமுறுத்தி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு தலைவணங்க வைப்பது.

3. பிறகு சிரியா மேல் போர்தொடுத்து அதை பிரான்ஸ்நாட்டுக் காலனியாக்குவது, அதற்கு விலையாக பிரான்ஸ் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது.

4. சிரியாவின் ஆதரவு ஹெஸ்பொல்லாவிற்கு இல்லாமல் போகும் சூழ்நிலையில் ஜோர்டானையும் லெபனானையும் இஸ்ரேல் மிரட்டி வைப்பது. பாலஸ்தீனை ஒன்றும் இல்லாமல் செய்வது அல்லது இஸ்ரேலின் காலனியாக்குவது.

5. ஈராக் காரியம் முடிந்தவுடன் ஈரானைத் தாக்கி அதை நிர்மூலமாக்குவது. சன்னி மற்றும ஷியா முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் கொன்று ஒழிக்க ஆன அத்தனை காரியங்களையும் செய்வது.

6. சவுதிஅரேபியா அரச குடும்பத்தை மிரட்டி தனது செயல்களுக்கு ஆமாம் சாமி போட வைப்பது. மறுக்கும் பட்சத்தில் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வளம் மிகுந்த கிழக்கு சவுதி அரேபியாவை பிரித்து வெறும் அரேபியாவாக்கி அதற்கு அமெரிக்கப் பொம்மை அரசரை பதவியேற்க வைப்பது.

தற்போது ஐந்து வருட இடைவெளியில் நடந்திருப்பவற்றை தொடர்புபடுத்திப் பாருங்கள்.

ஆனால், திட்டம் தொடர்ந்தது. பத்து வருடங்கள் ஈராக்கிய மக்களை பட்டினிபோட்டு கொன்றதுமில்லாமல், அந்நாட்டின் பொருளாதாரத்தை உள்கட்டமைப்பை முடக்கி வைத்திருந்து, செப்டம்பர் தாக்குதலை மையப்படுத்தி கடைசியில் வலுவிழந்திருந்த ஈராக்கின் மேல் போர்தொடுத்த ஓர் சாத்தான் (உபயம்: வெனிசுலா அதிபர் சாவேஸ்) ஜார்ஜ் புஷ். சதாமின் கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. அதை இவ்வளவு அவசரமாக நிறைவேற்றியதன் மூலம் ஜார்ஜ் புஷ்ஷின் கோரமுகம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டிருந்த குற்றவாளிகளெல்லாம் சிறையில் வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஈராக்கிய மக்களைக் கொன்றதாகக் கூறி ஒரு முன்னாள் ஜனாதிபதியை புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின்படி அமெரிக்க அரசின் நேரடித் தூண்டுதலின் பேரில் தூக்கிலிட்டார்களே..

அது எதற்குத் தெரியுமா..

அரபு தேசத்தில் உள்ள அத்தனை தேசத்து அரச குடும்பங்களையும் பயமுறுத்தி வைக்கத்தான்.

அதாவது...

1. பல நூறு ட்ரில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் அரபுநாடுகளின் மன்னர் குடும்பத்தினர், அந்தப் பணத்தை இப்போதைக்கு அமெரிக்காவிலிருந்து எடுக்கக்கூடாது அல்லது ஈரோவாக மாற்றக் கூடாது.

2. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் அல்லது ஏறக்குறைய இலவசமாக எண்ணெய் கிடைக்க வேண்டும்.

3. ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களிடையே ஒரு நிரந்தரப் பகைமையை பெரிய அளவில் வளர்த்துவிட வேண்டியது. அதன் மூலம் ஒரு நிரந்தரமற்ற பயமிகுந்த ஒரு சூழலை (FUD) ஏற்படுத்துவது. இஸ்ரேலுக்கு எந்த தேசாந்திர எதிரியும் இல்லாமல் செய்வது.

4. அமெரிக்காவின் சொல்லுக்கு மாற்றுப் பேசும் எந்த அரபுதேசத்து அரசகுடும்பத்தினருக்கும் இதுதான் கதி என்று காண்பிப்பது.

ஒரு நாட்டின் அதிபர் அதிகாரத்தில் இருக்கும் போது நாட்டைக் காப்பதற்காக எடுக்கும் எந்த முடிவையும் பின் வரும் அரசுகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தீர்ப்பு வழங்குமானால், உலகின் அத்தனை தலைவர்களும் தூக்குமேடைக்குப் போக வேண்டியவர்களே.. இதை முதலில் உணரவேண்டும்.

அமெரிக்காவிற்கு இன்றைக்கு சதாம் எதிரியாக இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு சதாம் செய்த உதவிகள் ஏராளம். மன்மோகன் சிங் அரசு ஒரு சிங்க அரசாக இந்தத் தண்டனைக்கு எதிராக கொஞ்சம் உரக்கவே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

1991-ல் சதாமின் பெயரை தமது பிள்ளைகளுக்கு பெயராக சூட்டிய பெற்றோர்களும், இன்றைக்கு 15-16 வயதிருக்கும் அந்தப் பிள்ளைகளும் மட்டுமின்றி கோடிக்கணக்கான முஸ்லிம்களும் இன்றைக்கு சதாமை ஒரு தியாகியாக நினைக்கிறார்களோ இல்லையோ.. அமெரிக்காவையும், ஜார்ஜ் புஷ்ஷையும் மனதிற்குள் ஆற்ற முடியாத வடுவாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இது தொடர்பான அவசியம் படிக்கவேண்டிய சுட்டிகள்:

1. RUPE-INDIA

2. SAAG

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 5

டிசம்பர் 17, 1995 - சரியாக 11 வருடங்களுக்கு முன்னாள் கல்கத்தாவின் அருகில் உள்ள புருலியா மாவட்டத்தின் 7 கிராமங்களில் நள்ளிரவில் ரஷ்ய ஆண்டனோவ் ரக விமானம் (Antonov-21) தாழப்பறந்து பாராசூட்கள் மூலம் எதையோ இறக்கிவிட்டுச் சென்றது. நல்ல தூக்கத்தில் இருந்த கிராமத்து மக்கள் தாழப் பறந்த விமானத்தின் இரைச்சலால் தூக்கம் விழித்தனர். இளைஞர்கள் சில தாழப்பறந்த விமானத்தைத் துரத்தி ஓடினர். அப்போதுதான் வெள்ளை நிறத்தில் குடைவிரித்து பாராசூட் இறங்குவதைக் கவனித்து, அந்தப் பாராசூட்டை நெருங்கிப் பார்த்தால் ஒரு கள்ளிப் பெட்டி. தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டுவந்து அந்த நள்ளிரவிலும் அதை உடைத்துப் பார்த்தனர். அப்போது என்ன சத்தம் என்று கேட்டுக் கொண்டு அரைகுறையாக விழித்திருந்த கிராமத்தினர், அந்தப் பெட்டியிலிருந்த பொருளைக் கண்டவுடன் சுத்தமாக தூக்கம் கலைந்தனர். அது, எப்போவோவது உள்ளுர்ப் பொதுத் தொலைக்காட்சியில் வரும் சினிமாவில் வில்லன்கள் கோஷ்டி வைத்திருக்கும் அதே கலானிஷ்கோவ் ரக துப்பாக்கிகள்.

இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கண்டனங்கள் கண்டபடி பறந்து செய்தித்தாள்களில் அல்லோலகலப்பட்டுக் கொண்டிருக்க, அந்த விமானம் கல்கத்தாவிலிருந்து பாங்காக் போய் மீண்டும் கல்கத்தா திரும்பி வரும்போது வானிலை சரியில்லாத காரணத்தால் சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டது. சென்னையிலிருந்து கராச்சி நோக்கி பறந்து கொண்டிருந்த அந்த விமானம் தரையிறங்க இரண்டு மணிநேரம் இருக்கும்போது மும்பையின் விமானக்கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளால் பறக்க அனுமதி வாங்காத வான் எல்லையில் பறப்பதாகக் கூறி மும்பைக்குத் திரும்பச் சொல்ல வேறுவழியின்றி, ஐந்து நாள் இடைவெளியில் ஆயுதந்தூவிய அதே ஆண்டனோவ் விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. பிறகென்ன மாமியார் வீட்டு வாசம் தான். இந்த ஐந்து நாள்களில் அந்த விமானம் பலமுறை இந்திய வான் வெளியில் பறந்து சென்றிருக்கிறது. யாரும் அதைத் தரையிறக்க ஏன் சொல்லவில்லை என்பது மர்மமாகவே இருந்தது.

விமானத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படிடையில் ஓட்டவந்த லாட்விய விமானச்சிப்பந்திகளும், அந்த விமானப் பயணத்தை முன்னின்று நடத்தி வந்த பீட்டர் பிளீச் என்ற முன்னாள் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியும் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த விமானப்பயணத்தை மற்றும் ஆயுதங்களை போடுவதற்கு ஏற்பாடு செய்த (டேவி) நீல்ஸன் என்பவரும் அதே விமானத்தில்தான் பயணம் செய்திருந்தார். ஆனால்... என்ன ஆனால்... இல்லையென்றhல் அவர் எப்படி சரியான வில்லனாக இருக்க முடியும். ஆம், போலீஸிற்கு டிமிக்கியோ.. கடுக்காயோ கொடுத்துவிட்டுத் தப்பி விட்டார்.

விமானச் சிப்பந்திகளையும் பீட்டர் பிளீச்சையும் விசாரித்ததில் ஒரு விஷயமும் புலப்படவில்லை. பத்திரிகைகளும் அவர்கள் இஷ்டத்திற்கு கண் காது மூக்கு வைத்து எழுதினார்கள். பீட்டர் பிளீச்சின் வாக்குமூலத்தை லண்டனிலிருந்து உளவுத்துறை உண்மைதான் என்று உறுதி செய்தது. அதன்படி ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பிற்கு அந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனந்தமார்க்கம் என்ற அமைப்பு மலைவாசி மக்களுக்காக போராட ஏற்படுத்தப்பட்ட ஒரு அமெரிக்க பிராக்ஸி அமைப்பு. இந்திய உளவுத்துறையின் கணிப்பின்படி ஆனந்த மார்க்கத்திற்கு ஆயுதந்தாங்குவது மாதிரியான நோக்கமில்லை என்பதில் உறுதிபட இருந்தார்கள். ஆக யார், செலவு செய்து இந்த ஆயுதத்தூவலைச் செய்திருக்கின்றனர் என்பது சரியாகப் புரியவில்லை. குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட அனைவருக்கும் இந்தியச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்குச் சென்றனர். அப்பீல்கள் ஒன்றும் வேலைக்காகவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் லாட்விய விமானச் சிப்பந்திகள் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்பட்டு ஊருக்கு அனுப்பப்பட்டனர். மற்றுமொரு வருடங்கழித்து பீட்டர் பிளீச்சும் அதே முறையில் விடுதலைசெய்யப்பட்டார். ஆயுதமழைக்கான காரணம் மட்டும் இன்னமும் இருட்டுக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே வரவில்லை.

பீட்டர் பிளீச் என்ற முன்னாள் பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி ரிடையர் ஆன காலத்தில் ஆயுத வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார். அதன்படி தனது தொடர்புகளின் மூலம் இதைச் செய்வது என்றபின் ஒரு கண்டிஷன் போட்டிருந்தது பிரிட்டிஷ் உளவுத்துறை. அது என்ன வென்றhல் எந்த விதமான ஆயுத வியாபாரமும் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிவிக்கப்படாமல் நடத்தக் கூடாது. அப்படி நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், முன்னாள் ராணுவ அதிகாரியென்றெல்லாம் பார்க்காமல் கம்பியெண்ண வேண்டியதுதான். இந்தக் கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டு பிளீச் ஆயுத வியாபாரத்தில் இறங்கினார். அதிகாரியெல்லாம் வியாபாரம் செய்வதில் அவ்வளவு நுணுக்கம் இல்லாதவர்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதை பிளீச் நிருபித்தார். விக்டரைப் போல கண்ணாமூச்சி விளையாடத்தெரியாமல், இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சில வருடங்கள் கல்கத்தா சிறையிலிருந்தபின், டோனி ப்ளேர் அத்வானியிடம் பேசுமளவிற்கு இந்த விஷயம் போய் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

பிளீச்சை விடுவிக்க டோனி பிளேர் பேசினாரென்றhல்.. லாட்விய விமானச் சிப்பந்திகளை விடுவிக்க யார் பேசியிருப்பார்கள்... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் என்று கண்டுபிடித்திருந்தால் உங்களைக் கண்ணாடியில் நின்று ஒருமுறை பாராட்டிக் கொள்ளுங்கள். லாட்வியா ரஷ்ய எல்லையில் உள்ள ஒரு மிகச் சிறு நாடு... பெரும்பாலான நேரம் பனிபெய்து கொண்டிருக்கும் அந்த நாடு, இந்தியாவிற்கு மாலத்தீவு மாதிரி;, ரஷ்யாவின் சிஷ்யகோடி நாடு.

இந்திய உளவுத்துறை இந்த சம்பவத்தைப் பற்றிய விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அளிக்க வில்லை.

அது அவர்களின் சௌகரியம் அல்லது வழக்கமான நடைமுறையாக இருக்கும்..

நாம் என்னதான் நடந்தது என்று சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

(விடுமுறைக்கு இந்தியா சென்றுவிட்டதால் இந்தத் தொடரில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. இனி தொடர் வாரமிருமுறை தொடர்ந்து வெளிவரும்)

ஆண்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி.

ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் புற்றுநோயால் பீணிக்கப்பட்டு இன்னுயிர் நீத்திருக்கிறார். அன்னாரை இழந்து வாடும் அடில் அம்மையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரைப்பற்றி சரியாக அறிந்திராதவர்களுக்காக பாலா அவர்களைப் பற்றிய சில குறிப்புகள்:

ஆன்டன் தனிஸ்லாஸ் பாலசிங்கம் என்ற பாலா அவர்கள் கொழும்புவிலிருந்து தற்போதும் வெளியாகும் வீரகேசரி என்ற தமிழ்ப்பத்திரிகையின் துணைஆசிரியராகப் பணியாற்றி வந்த, தமிழனுக்கென்று அடையாளமான தமிழ்இனஉணர்வு கொண்ட பத்திரிகையாளர். பிற்பாடு பிரிட்டிஷ் கவுன்சிலில் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக பணியேற்றுப் பின்னர் மேற்படிப்பிற்காக லண்டனுக்கு தம் அன்பு மனைவியுடன் கூடியேறினார்.

லண்டனில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றார். பிற்பாடு லண்டன் குடியுரிமையும் பெற்றார். இளம் வயதிலேயே சிறுநீரகக் கோளாருக்கான தமது மனைவியைக் கண்ணும் கருத்துமாகக் கூட இருந்தே கவனித்து வந்தார். அங்கு பணியாற்றிய அடில் என்ற அந்த ஆஸ்திரேலிய நர்ஸ், இப்படிக் கூட ஒரு கணவன் தன் மனைவியைக் கவனித்துக் கொள்ளமுடியுமா என்று வியந்து போவார். ஒருநாள், பிறப்புக்கும் சாவிற்கும் இடையிலான மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவை பாலாவிற்கு அளித்துவிட்டு, இறைவனடி சேர்ந்தார் அந்த அம்மையார். பிற்பாடு அடிலை மணம் புரிந்தார் பாலா அவர்கள். இந்தக் காலகட்டம் தான் பாலா அவர்களைத் தமது சமுதாயத்திற்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஒரு தீப்பொறியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒத்த கருத்துடையோர் இணைந்து செயலாற்றுவதை யாராலும் தடுக்க இயலுமா..

பிற்பாடு பாலா அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் யாவரும் அறிந்ததே.

பாலாவைத் திருமணம் செய்து கொண்டபோது தனது எண்ண வெளிப்பாடை இவ்வாறாக வெளிப்படுத்தியிருக்கிறார் அடில் அம்மையார்("The Will to Freedom" by Adele Balasingham - pages 19-23).

"நான் வெறுமே பாலாவை மட்டும் திருமணம் செய்ததாக நினைக்கவில்லை. ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளை, ஒரு சமுதாயத்தின் வரலாற்றை, தமிழர்களின் இனஉணர்வை, அதன் பலத்துடனும், அதன் பலவீனத்துடனும், அதன் பெருமிதமான வரலாற்றுடனும், அதன் தோல்விகளுடனும் தான் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்."

எவ்வளவு பெரிய சிந்தனை....

பாலா அவர்களை இழந்து வாடும் அடில் அம்மையாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குவோம்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 4

புதிது புதிதாக கம்பெனிகளை உருவாக்கி அதன்பேரில் இருக்கின்ற விமானங்களையே மீண்டும் மீண்டும் பதிவு செய்து உளவுத்துறையினரைத் திணறடித்துக் கொண்டிருந்தார் விக்டர். இந்தமாதிரியான சூழலில் ஈராக்கில் ஹாலிபர்ட்டன் என்ற நிறுவனத்தினரிடம் ஒரு கான்ட்ராக்ட் பெற்றுவிட்டிருந்தார். ஹாலிபர்ட்டன் என்பது அமெரிக்காவில் அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்குப் பெற்ற ஒரு கம்பெனி. அதன் டைரக்டர்கள் பெரும்பாலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளாகவோ.. அல்லது தற்போதைய செனட்டர்களாகவோ இருப்பார்கள்.

அமீரகம் அமெரிக்காவின் அன்புடன் கூடிய கண்டிப்பால் விக்டர் சார்ஜா மண்ணில் காலூன்றாதவாறு பார்த்துக்கொள்ள உறுதியளித்திருந்தது. ஆனால்.. ஈராக்கிற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் அந்தக் கான்ட்ராக்டை எப்படியும் விக்டரின் கம்பெனி பெற்றுக் கொண்டிருந்தது. விக்டர் பற்றித் தொடர்ந்து துப்பு துலக்கிவரும் அதிகாரி அவ்வப்போது தனது மேலதிகாரியினருக்கு விக்டர் தற்போது எந்தப் பெயரில் கம்பெனி தொடங்கியிருக்கிறார் என்று விபரமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும், சார்ஜாவில் ஈராக் சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் அதிகாரி விக்டரின் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். அதற்குச் சொல்லப்ட்ட காரணம் என்ன தெரியுமா.. அவசரமாக ஏற்றியனுப்பச் சொல்கிறீர்கள்.. என்ன செய்வது.. யார் என்ன என்ற பின்னணியையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. அப்படி ஆராய்ந்துதான் அனுப்ப வேண்டுமென்றால் எல்லாப் பொருள்களும் சற்று தாமதமாகவே வந்து சேரும் பராவாயில்லையா... என்று கேட்க.. சரியான நேரத்தில் சரக்குகள் வரவில்லையென்றால் துருப்புகள் துப்பாக்கியைத் திருப்பிப்பிடித்துவிட்டால் என்ன செய்வது... சரி சரி.. எப்படியோ தொலை.. அதை அந்த பென்டகன் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும். என்று.. இப்படியாக..இது வழக்கமாகிப்போனது.

எப்படியும் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி தப்பித்து விடும் விக்டர் பௌட்டை இன்றைக்கு உளவு நிறுவனங்கள் கண்டுகொள்வதை நிறுத்தி விட்டதாகவே தோன்றுகிறது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ விக்டரைப் பற்றி உளவறியும் அதிகாரியை வேறுவேலைபார்க்க பணித்துவிட்டது. பெல்ஜியத்தில் சரியான ஆதாரங்களுடன் விக்டர் சிக்கியிருக்க.. அதை விசாரிக்கும் அதிகாரிக்களுக்கிடையில் சில மோதல்களால் அந்த விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட.. பிரிட்டிஷ் உளவு நிறுவனம் மட்டும் இதுபற்றி விடாக்கொண்டனாக தொடர்ந்து கவனித்துவருகிறது. தற்போது பிரிட்டனில் இறந்து போன முன்னாள் ரஷ்ய கேஜிபி உளவாளி ஒருவரைப் பற்றி பிரிட்டிஷ் அரசு இவ்வளவு தீவிரம் காட்டுவதின் பிண்ணனியில் விக்டர் பௌட்டை சிக்க வைக்கும் சூட்சுமம் இருப்பதாக சர்ச்சை உள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது போகப்போகத் தெரியும்.

இவ்வளவு கூத்துக்கிடையிலும் விக்டர் மாஸ்கோவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்துவருகிறார். அவரின் பாஸ்போர்ட் காப்பிகூட இன்டர்நெட்டில் இருக்கிறது. ஆனால் அவரை சமீபத்தில் பெய்ருட்டில் பார்த்ததாக சில ஒற்றர்கள் தகவலனுப்பியருந்தனராம். ரஷ்ய அரசு ஒரு முறை அவர் ரஷ்யாவில் இல்லை என்றே இன்டர்போலுக்குத் தகவல் அனுப்ப. புத்திசாலித்தனமாக அவர்கள் சிறிது காலத்திற்குமுன்னர் ரஷ்ய வானொலிக்கு விக்டர் பௌட் என்றே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அளித்த பேட்டியின் ஒலிநாடாவைக் கொடுத்தபின்னர்.. எங்களுக்குத் தெரியாமல் இங்கிருக்கலாம் என்று சொல்லி மழுப்பியது தனிக்கதை.

விக்டருக்கு அப்படி என்ன நோக்கம். அப்பாவி மக்களைக் கொல்வதற்கு ஆயுதம் விற்பதும் ஒரு பிழைப்பா.. ஏதாவது மனசாட்சி என்று ஒன்று அந்த மனிதருக்கு இருக்குமா.. மனசாட்சியைக் கொன்று விட்டு செயல்படத் தூண்டியது... கொழுத்த லாபமா?... இல்லை.. ஆபத்தான விஷயங்களில் ஈடுபட்டு சாகசம் செய்வதில் ஈடுபடா.. எது விக்டரை இப்படி ஒரு மோசமானவராக்கத் தூண்டியது... வேலு நாயக்கரைக் கேட்டது போல் நீங்க நல்லவரா அல்லது கெட்டவரா என்று இவரைக் கேட்க எந்தப் பேரனும் இன்னும் வரவில்லை..

ஆயுதம் விற்போருக்கும் கலகம் செய்வோருக்கும் ஒரு நாட்டைச் சீரழிக்க நினைக்கும் சில பெரிய மனித நாடுகளுக்கும் விக்டர் பௌட் மாதிரியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். இவர் இவ்வளவு காலம் யார் பிடியிலும் சிக்காமல் இருக்கும் இரகசியம் என்னவென்று கேட்டால்... நல்ல செய்தியோ.. கெட்ட செய்தியோ.. யாராவது போஸ்டமேனைச் சுடுவார்களா.. விக்டர் போஸ்டமேன் மாதிரி;. அவர் வேலை டெலிவரி செய்வது. அவ்வளவு தான். அவரைப் போய்ப் பகைப்பானேன். என்று அவரின் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். இந்த ஒரு விஷயம் தான் விக்டரை இன்றுவரை எந்த வில்லங்கத்திலும் மாட்டாமல் தப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதை மிக லாவகமாகத் தனக்குப் பயன்படுத்திக் கொள்வதில் விக்டர் வல்லவராக இருக்கிறார்.

ஒரு வகையில் விக்டர் போன்ற தனி மனித ஆயுத வியாபார அமைப்புகள் இருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகள் சுலபமாக நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடிகிறது. விக்டர் போன்ற ஒருங்கிணைக்கும் ஆட்கள் இல்லையென்றால்.. ஆயுத வியாபாரம் ஒன்றும் படுத்துவிடப்போவதில்லை. ஆயுதத் தொழிற்சாலைகள் இயங்கியாக வேண்டுமே.. உற்பத்தியை விற்றாக வேண்டுமே... சிறுசிறு குழுக்களாக ஆயுதம் விற்பவர்கள் சிதறிப்போனால், யார் யார் ஆயுத வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிப்பது சாத்தியமாகது. ஏனெனில் அப்படி சிறு சிறு குழுக்களாக ஆயுத வியாபாரம் செய்தால், ஒன்று என்ன, எத்தனை அரசுகள் முன்வந்தாலும் சரியான முறையில் துப்புச் சேகரிப்பது முடியாமல் போகும். அரசுகளுக்கே ஆபத்தாகப் போகும். ஆகையால்.. விக்டர் போன்ற ஆயுத வியாபாரிகள் இன்னும் செழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விக்டர் போனால் இன்னொரு ராபர்ட் வருவார்... ஆக ஆயுதத் தொழிற்சாலைகள் இருக்கும் வரை ஆயுத வியாபாரிகள் இருக்கத்தான் போகிறார்கள்.

விக்டரின் பராக்கிரமத்தைப் பற்றி எழுதியது இப்போதைக்குப் போதும் என்று நினைக்கிறேன். இனி வேறு சில புண்ணியவான்களைப் பற்றிப் பார்க்கலாமா...

அடுத்து நாம் பார்க்கப் போவது...

1995 வாக்கில் மேற்கு வங்காளத்தில் புருலியா என்ற இடத்தில் நள்ளிரவில் ஒரு விமானம் துப்பாக்கிகளைத் தூவிவிட்டுச் சென்றதே நினைவிருக்கிறதா... தமிழ்ப்பத்திரிகைகளில் கூட.. புருலியா ஆயுதமழை என்று வர்ணித்தனவே... அதைப் பற்றித்தான்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 3

விக்டர் தனது முதல் விமானச் சேவையை டென்மார்க்குக்கு பொதுவான சரக்குகளை ஏற்றி அனுப்பி ஆரம்பித்தார். அந்த வியாபாரம் கடுமையான போட்டிகளுக்கிடையில் நடத்த வேண்டியிருந்தது. சரியான ரேட் என்பதை விட சரியான லாபம் கிடைக்க வில்லை என்றே கூறலாம். அதனால, அதிகம் கூட்ட நெரிசல் இல்லாத பகுதியாக வியாபாரம் செய்யலாம் என்று ஆப்ரிக்க நாடுகளையும் மத்தியகிழக்கு நாடுகளையும் தேர்ந்தெடுத்தார். பிறகு வியாபாரம் வெகு சூடு பிடித்துவிட்டது. பிற்பாடுதான் துப்பாக்கி வியாபாரத்தில் நுழைந்தார்.

இவரது தொழில்முறை நண்பர்கள் வேறுமாதிரி கதை சொல்கிறார்கள். எது உண்மை என்று விக்டர் கூட சொல்லுவாரா என்று தெரியவில்லை. அவர் நண்பர்கள் சொல்லுவது இதுதான். ரஷ்ய ஜெனரல்களில் சிலர் கூட்டு சேர்ந்து கொண்டு அப்போதைய கேஜிபி துணையுடன் விக்டருக்கு சொற்பத் தொகைக்கு விமானங்களை விற்பதாகக் காட்டிக்கொண்டு அவற்றை வியாபாரத்தில் ஈடுபடுத்துவது. வரும் வருமானத்தில் பங்கு கொடுத்துவிடுவது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான விமானங்கள் சரியான பராமரிப்பில்லாமல் எரிபொருள் நிரப்பக் காசில்லாமல் காயலான்கடைக்குப் போகத் தயாராயிருந்தன. இந்தியாவில் கூட ரஷ்யத் தயாரிப்பு விமானங்களுக்கு ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காமல் கஷ்டப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த மாதிரியான சூழ்நிலையில் காசு பார்ப்பதற்காக இரஷ்ய இராணுவ அதிகாரிகளும் உளவுத்துறையும் சேர்ந்து இதைச் செய்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆயுதக் கிடங்கிலும் தனியாக விமானம் வந்து இறங்கி ஏற்றிச் செல்ல ஓடுதளங்கள் உண்டு. அவற்றில் இரவோடு இரவாக காவலாளிகளைக் கையில் போட்டுக் கொண்டு ஆயுதங்கள் விக்டரின் விமானத்தில் ஏற்றப்படும். இந்தக் காட்சியை நீங்கள் தத்ருபமாக கற்பனைசெய்து பார்க்க விரும்பினால் லார்ட் ஆப் வார் (LORD OF WAR) என்ற இந்தப் படத்தைப் பாருங்கள். அப்படி பலப்பல ஆயுதச் சாலைகளில் ஆயுதங்கள் விமானங்களில் ஏற்றப்படுவதைக் காட்டியிருப்பார்கள். கதையின் நாயகன் நிக்கோலஸ் கேஜ், உக்ரேனியன் என்று தன்னைச் சொல்லிக்கொள்வார். இந்தப் படம் விக்டர் பௌட்டைப் பற்றியது என்ற ஒரு கூற்றும் உண்டு. ஆனால் அவரை நல்லவனாகப் படத்தில் காட்டியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

சரி விஷயத்திற்கு வருவோம்...

ஒரு விமானம் ஆயுதங்கள் கடத்துவது தெரிந்தால் அந்த நாட்டு விமான நிலையங்களிலோ அல்லது வேறு நாடுகளில் எரிபொருள் நிரப்பும்போதோ தடுத்து நிறுத்தி முடக்கமுடியுமே.. விக்டர் மட்டும் எப்படி இதற்கு விதிவிலக்கு.? இதைப்பற்றி விளக்கம் அளிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் AIRCRAFT REGISTRY எனப்படும் விமானப் பதிவு பற்றிய விபரங்களைப் பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும். RTO ஆபிஸில்போய் வண்டியைப் பதிவு செய்வது மாதிரி, ஒவ்வொரு விமானத்தையும் ஏதாவது ஒரு நாட்டில் பதிந்து கொண்டாக வேண்டும். அந்த நாட்டின் சட்டதிட்டப்படிதான் அந்த ஊழியர்களைக் கைது செய்யவோ முடக்கவோ முடியும். வேறு நாட்டில் அந்த விமானத்தை ஒன்றும் செய்ய இயலாது. சட்டம் சரியாகத் தானே இருக்கிறது. ஆனால் இங்குதான் சு{ட்சுமம் இருக்கிறது. ஒரே விமானத்தை பல நாடுகளில் பல பெயர்களில் போலியான விபரங்களைக் கொடுத்து பதிந்து செய்து கொள்வது. இதனால், அதே விமானம் பல்வேறு நாடுகளில் உள்ளுர்ப் போலீஸ் எதுவும் செய்ய முடியாமல் சர்ரென்று பறந்து போய்விடும். இதே கதை கப்பலுக்கும் உண்டு. அதன் விவரஙகள் இதே தொடரில் வேறு சில புண்ணியவான்களைப் பற்றிச் சொல்லும்போது வரும். விக்டரின் விமானங்கள் இரண்டு நாடுகளில் பதியப்பட்டிருந்தன. ஒன்று லைபீரியா மற்றது ஈக்வெட்டோரியல் கினியா. இதில் லைபீரியாவின் AIRCRAFT REGISTRY எங்கிருந்தது தெரியுமா. லண்டனில் உள்ள கெண்ட் நகரத்தில், அதுவும் விக்டர் வாடகை கொடுத்துவரும் ஒரு அலுவலகத்தில். இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்குமே. லைபிரிய REGISTRY-க்கு நெருக்குதல் வந்தால் கினியா REGISTRY-யில் அதே விமானம் சில மணிநேரங்களுக்குள் பதிவாகி ஆணவங்கள் தயாராக இருக்கும்.

விக்டரின் விமானங்கள் லைபிரியாவிலோ அல்லது கினியாவிலோ பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா விதமான தனது விமானச் சேவைகளுக்கும் அலுவலகம் உட்பட இயங்குதளமாக பயன்படுத்திக் கொண்ட இடம் எது தெரியுமா...

ஆச்சரியப்படாதீர்கள்... ஆம்.. சார்ஜாவேதான்.

அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவிலிருந்துதான் விக்டர் பௌட்டின் விமான சேவை தொடரந்து நடந்து கொண்டிருந்தது. இவரின் விமானங்கள் ஒரு நாட்டிற்கே தேசிய விமானமாக பணியாற்றியதும் நடந்தது. அந்த ஏழை நாடு சென்ட்ரல் ஆப்ரிக்க குடியரசு. எப்படிப்பட்ட போர்வைகள்.. எப்படிப்பட்ட நெட்வொர்க்.

எங்கும் யார் கண்ணிலும் நுழைந்து வெளிவந்து கொண்டிருந்த விக்டரை, ஒரு இயக்கம் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிப் பார்த்தது. அந்த இயக்கத்திற்கு அடுத்தவர் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்றால் பொங்கல் சாப்பிடுவது மாதிரி.. முதலில் ரஷ்யாவின் கண்ணில், பிற்பாடு அமெரிக்காவின் கண்ணிலும்... இன்னேரம் புரிந்திருக்குமே...

இல்லையென்றால் பரவாயில்லை...

அது... தாலிபான்.

விக்டரின் முதல் ஆயுத வியாரத்திற்கு 1992-ல் பிள்ளையார் சுழியிட்டவர்கள் வடக்குக் கூட்டணி என்றழைக்கப்பட்டு வந்த தாலிபான்களின் எதிர்ப்புக் குழுவினர். ரஷ்யாவால் உருவாக்கப்பட்டிருந்த இந்த அமைப்பினரை அமெரிக்காவால் உருவாக்கப்பட்டிருந்த தாலிபான்கள் கடுமையாக எதிர்த்து ஒரு நாளில் ஆட்சியையும் பிடித்தனர் என்பது பிந்தைய வரலாறு. 1995ல் தாலிபானின் மிக் ரக போர்விமானமொன்று விக்டரின் ஆயுதவிமானத்தை மறித்து கந்தகாரில் தரையிறக்கி விமானத்தை முடக்கி வைத்துக் கொண்டது. அதன் சிப்பந்திகளையும் சிறையிலடைத்தது. விக்டர் என்னென்னமோ பேசிப்பார்த்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு தாலிபான்கள் சிலர் அசந்த வேளையில் அந்தச் சிப்பந்திகளெல்லாம் ஓடிப்போய் அவர்களது விமானத்திலேறி தப்பி வந்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அங்கு பேரம் ஒன்று நடந்தேறியதாகவும்,, இனி தாலிபான்களுக்கும் ஆயுதந்தருவதான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாகவும் சொல்லப்படுகிறது.

சார்ஜாவில் ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான்,. அதாவது 1995ல் சுதந்திர வர்த்தக வளாகம் (FREE TRADE ZONE) ஏற்படுத்தப்பட்டது. அச்சமயத்தில் துபாயில் ஜெபல் அலி சுதந்திர வர்த்தக வளாகம் (JAFZA - JEBEL ALI FREE TRADE ZONE AUTHORITY) பல்வேறு நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவித்த வண்ணம் இருந்தது. அதைப் பின்பற்றி ஏற்படுத்தப்பட்ட சார்ஜா வளாகம் விக்டருக்கும் தாலிபான்களுக்கும் ஆயுதங்களிலிருந்து குண்டுசி வரை, சாட்டிலைட் போனிலிருந்து குளிர்சாதனப் பெட்டி வாங்குவது வரை.. கொள்முதல் செய்யும் கிழமைச் சந்தையாகிப் போனது. சார்ஜாவில் கன ஜோராக தொழில் நடந்தேறியது. விரைவில் தாலிபான்களும் விக்டரும் மிகவும் அன்னியோன்யமாகிப் போனார்கள். விக்டரின் பொறியாளர்கள் ஆப்கானிஸ்தான் சென்று தாலிபான்களின் தேசிய விமானங்களைப் பழுது நீக்கி வரும் வேலையெல்லாம் செய்தனர். பின்னர் இது மென்மேலும் மெருகேறி ஆட்களை பயிற்றுவிக்க ஏற்றிச் செல்வது, போதைப்பொருள் ஏற்றிச் செல்வது போன்ற இன்ன பிற துஷ்ட காரியங்களுக்கெல்லாம் விக்டர் துணைபோனார்.. தாலிபான் விக்டருக்கு கொடுத்த தொகை ஐம்பது மில்லியன் டாலர்களுக்கும் மேல் இருக்கும். ஐம்பது மில்லியன் என்பது சிறியதொகையாக விக்டருக்குத் தெரிந்தாலும் அவர் விற்ற தளவாடங்களில் அவருக்குக் கிடைத்த லாபம் மிக மிக அதிகம். இந்த சின்ன மீன் இவரை பெரிய மீன் பிடிக்கத் தூண்டியது.

ஆயுதங்களை மட்டும் விற்றுக் கொண்டிருந்தால் தான் ரொம்ப காலம் பிஸினஸ் செய்ய முடியாது என்று நினைத்த விக்டர், மனிதாபிமான உதவிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்று பணம் பார்ப்பதில் குறியானார். இது அவருக்கு வெளிப்படையாக ஒரு நல்லவர் என்ற தோற்றத்தை பெற்றுத் தரும் என்று நம்பினார். அவர் 90-களில் மேற்கு ஆப்ரிக்காவில் அதிக கவனம் செலுத்தி வந்தார் பெரும்பாலான விமானங்கள் அரிசி மற்றும் உணவுப்பொருள்களை அகதிகளுக்குக் கொண்டு போய் கொடுத்துவந்தன. லைபீரியா, அங்கோலா, காங்கோ, சுடான் எல்லா இடத்திலும் பிரச்னைகள். அங்கு ஐநா சார்பாகவும் ஏனைய ஐநா உறுப்பினர்களுக்காகவும் விமானசேவை; மறுபுறம் பிரச்னை நடத்திக் கொண்டிருக்கும் இரு தரப்பினருக்கும் ஆயுதங்கள் கொடுப்பது என்று ஆப்பிரிக்க மக்கள் தொகையை பெருமளவில் அழித்ததில் பெரும்பங்காற்றியவர் இந்த விக்டர்.

இவரின் நேர்மையான சரக்கு விமானப் போக்குவரத்தில் ருவாண்டாவிற்கு பிரெஞ்ச்சுத் துருப்புகளை ஏற்றிச் சென்றது முதல், சுனாமியின் போது இலங்கைக்கு உதவிப்பொருள் கொண்டு வந்து சேர்த்த வரையில் அடங்கும்.

இந்த வகையில்தான் ஏற்கனவே நாம் கண்டிருந்தபடி விக்டர் பெண்டகனை தனது கஸ்டமராக்கியதும் நடந்தது. விக்டர் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், பெண்டகன் அதிகாரிகளின் மூலமே தொடர்ந்து காண்ட்ராக்ட் பெற்ற வித்தையைப் பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 2

விக்டரின் கடந்தகாலம், ஒன்று, சரியாக யாருக்கும் தெரியவில்லை.. இல்லையென்றால் விக்டர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பியிருக்கிறார் என்று அர்த்தம். ஏனென்றால், ஒவ்வொரு உளவுத்துறையும் வேறு வேறு விதமான கடந்தகால வரலாறுகளை வைத்திருக்கிறார்கள். அவருக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் அவரின் அண்ணன் அவர் கூடவே அவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் என்பதும் ஓரளவு ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல். மற்றபடி அவரைப் பற்றிய தனிப்பட்ட தவகல்கள் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட முடியாதவையாக வைத்திருக்கிறார். அவரின் ரஷ்ய பாஸ்போர்ட் அவர் தஜிகிஸ்தானில் ஜனவரி 13 1967ல் பிறந்ததாகச் சொல்கிறது, ஆனால் அவர் 2002ல் மாஸ்கோ ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் துர்க்மெனிஸ்தானில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். 2001ல் தென் ஆப்ரிக்க உளவுத்துறை அவர் ஒரு உக்ரேனியன் என்று பதிவுசெய்திருக்கிறது. அவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்கள் இருப்பதும், அவற்றில் வாடிம் அமினோவ், விக்டர் அனடாலியேவிட்ச் பௌட் விகட் புலாகின் மற்றும் அமெரிக்கர்களால் அறியப்பட்ட விகட்ர பட் என்ற பெயர்களில் அவரிடம் பாஸ்போர்ட்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது போக உளவுத்துறையினருக்குத் தெரியாமல் என்னென்ன பெயரோ.. இன்னும் எத்தனை பாஸ்போர்ட்களோ... மனிதர் வெகு விவரம்...

திட்டமிட்டுத் தன்னைப் பற்றிய விபரங்களை ஒன்று மறைப்பது அல்லது பரப்புவது என்று மனிதர் வெகு சாதுரியமாக நடந்திருக்கிறார். தன்னை ஒரு முன்னாள் விமானப் படை அதிகாரி என்றும் சோவியத் இராணுவத்தின் பல்மொழி பயிற்றுவிப்பு மையத்தில் பயின்றவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் விக்டர் பௌட் ரஷ்யன், ஆங்கிலம் மற்றுமல்லாமல், ப்ரெஞ்ச், போர்ட்சுகீஸ், உஸ்பெக் மற்றும் சரிவர வெளித்தெரிந்திராத பல்வேறு தென் ஆப்ரிக்க மொழிகளைச் சரளமாகப் பேசுவதில் வல்லவராம். பிரிட்டிஷ் மற்றும் தென்ஆப்பரிக்க உளவுத்துறையினர் (இரு நாட்டு அதிகாரிகளும் பெரும்பாலும் பிரிட்டிஷார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது) அவர் இத்தாலியில் 1985 முதல் 1990 வரை கேஜிபி எனப்படும் ரஷ்ய உளவுத்துறைக்காகப் பணியாற்றியவர் என்று குறிப்பிடுகின்றன.

தன்னை எப்போதும் எந்த நாட்டின் உளவுத்துறைக்கும் தொடர்பிருப்பதாக ஒருபோதும் சொல்லியதில்லை மேலும் அப்படி ஒரு குற்றச்சாட்டு சாட்டப்படும்போதெல்லாம் கடுமையாக மறுத்துவந்துமிருக்கிறார். ஆனால் ரஷ்யாவின் பெரும்பாலான ஒருங்குபடுத்திய குற்றச்செயல்களை நடத்திவருவதாகக் குறை கூறப்படும் விக்டர், ரஷ்ய இராணுவத்தின் இரகசிய இராணுவப் பள்ளியின் முன்னாள மாணாக்கர் என்பதும், பனிப்போர் காலங்களில் பல்வேறு நாடுகளுக்கும் கம்யூனிசத் தோழர்களுக்கும் உதவியளிக்க இவர் பெரும் அளவில் பணிபுரிந்திருக்கிறார் என்றும் ஊகிக்கப்படுகிறது.

இந்த ஊகம் உண்மையோ இல்லையோ, பனிப்போர் முடிவுற்ற காலகட்டத்திற்குப் பின் சிதறுண்டுபோன இரஷ்யாவின் பல மாநிலங்களின் அவசர வருமானத்திற்கு வழிகோலிய ஆபத்பாந்தவனாகத் தெரிந்தார். உதாரணத்திற்கு, இரஷ்ய விமானப்படை எரிபொருள் நிரப்பக் கூட வழியின்றி இருந்த நேரம் அது. பைலட்டுகளுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கார்கோ விமானமான "ஆன்டனோவ்"கள் எல்லாம் அந்தந்த விமான நிலையங்களில் சீண்டுவாரின்றி காற்றிறங்கிப் போன டயர்களுடன் நின்றிருந்தது.

உடைந்துபோன ரஷ்யாவில், அந்தந்த மாநிலங்களுக்கு யார் பொருளாதார உதவி செய்வார்கள் என்பன போன்ற வயிற்றுப் பிரச்னைகளைப் பற்றி பேச யாரும் இருக்க வில்லை. எத்தனைநாள் சம்பளம் கொடுக்காமல் ஊழியர்களை வைத்திருப்பது. யோசித்தார்கள். ஏக்கர் கணக்கில் கட்டிடம் கட்டி சேர்த்து வைத்திருந்த இராணுவத் தளவாடங்கள் தேவையில்லா பொம்மைகள் போல அவர்களுக்குத் தோன்றின. இராணுவத் தளவாடங்கள் என்ற ஒரு பதத்தில் அடக்கி விட்டாலும் அதன் வகைவகையான உபபொருட்களான ஆயுதந் தயாரிக்கும் தொழிற்சாலைகள், துப்பாக்கிகள், டாங்க்குகள், வெடிபொருள்கள், விமானங்கள், இராக்கெட்டுகள், ஏவுகணைகள் என லிஸ்ட் பெரியது (அமெரிக்கா விவரமாக ரஷ்யாவின் அணுஆயுத உற்பத்தி பகுதிக்களை தனது நேடிக் கண்காணிப்பில் வைத்திருந்தது). ஆக இவர்களுக்கெல்லாம் இதை உலகெங்கும் இரகசியமாக நம்பிக்கையுடன் விற்றுக் காசு கொடுக்க ஒரு நம்பகமான நபர் தேவைப்பட்டார். அந்த நபர்தான் விக்டர் பௌட்.

சற்று முன் பார்த்தோமே.. ஆன்டனோவ் கார்கோ விமானங்கள்... விமானமும் ஓட்டக் கற்றிருந்த விக்டர், ஒரு புண்ணிய நாளில் யோசிக்க யாருக்கும் அவகாசமின்றி மூன்று ஆண்டனோவ் ரக விமானங்களை $120,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான்.

உங்களுக்கு உங்களின் 25 வயதில் மூன்று மிகப்பெரிய கார்கோ விமானங்களைக் கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.

விக்டர் என்ன செய்தார் தெரியுமா..

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 1

இந்தத் தொடர் ஒரு வித்தியாசமான தொடர். உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஆயுத வியாபாரிகளைப் பற்றியது. இவர்கள் தான் உங்கள் அக்கம் பக்கத்தாரை வெடிகுண்டுகளால், துப்பாக்கியால், சமூக வன்முறையால், தேசதுரோக செயல்களுக்குத் தூண்டுகோளாக இருப்பவர்களில் ஒருவராக இருப்பர் என்று என்னால் சொல்லமுடியும். ஏன் இதைச் செய்கிறார்கள். எல்லா தொழிலும் அதிக பட்சம் 50 சதவீதம் லாபமிருக்கும்.. ஆனால் ஆயுத வியாரத்திலோ ஆயிரக்கணக்கான சதவீதம் லாபம் இருக்கும் போது இதைச் செய்வது எவ்வளவு லாபகரமானது... ஆனால் அந்த அளவுக்கு இதில் ஆபத்தும் இருக்கிறது. அதிக ஆபத்து, அதிக சன்மானம்...

இந்த ஆயுத வியாபரத்தை பற்றி ஆராயப்போனோமானால் ஆண்டாண்டு காலமாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணையோடு தம் சுயலாபத்திற்காக மட்டும் செயல்பட்டு எத்துணையோ உயிர்களைப் பலி வாங்கிய இவர்களைப் பற்றிய செய்திகள் திடுக்கிடும் விறுவிறுப்பான துப்பறியும் நு}ல்களைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் அத்தனையும் நிஜம். இது ஒரு விவகாரமான விஷயம் தான். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதைப் படிக்கும் அவர்களின் ஆதரவாளர்கள் மன்னிப்பார்களாக...

நாம் முதலில் தற்போது இரஷ்ய அரசின் ஆதரவோடு சுதந்திரமாக அந்த நாட்டிலே வெளிப்படையாக வசித்துக் கொண்டிருக்கும் விக்டர் பௌட்டைப் பற்றி.யும் பிற்பாடு வேறு சில நபர்களைப் பற்றியும் பார்க்க இருக்கிறேhம்.

முதலில் விக்டர் பௌட் (Victor Bout) ஐப் பற்றியது.

விக்டர்; பௌட்.. ஒரு தனித்துவம் வாய்ந்த சமீபகால சர்வதேச ஆயுத தொழில்முனைவர். 40 வயதுக்கும் குறைவான விக்டர் பௌட் ரஷ்யக்குடிமகன். ரஷ்ய அரசால் கண்டும் காணாமல் நடத்தப்படுகிற சக்தி வாய்ந்த குடிமகன். மிகவும் கண்ணியமானவர், தொழில்நாணயமிக்கவர். பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லாத உன்னத கர்ம வீரர். தம் குடும்பத்தை மிகவும் விரும்புபவர். ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். கடின உழைப்பால் முன்னேறிய அதீத செல்வம் கண்ட மாபெரும் செல்வந்தர். இதெல்லாம் அவர் வெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பம். கடந்த பத்தாண்டுகளுக்குள் ஒரு மகோன்னத பொருளாதர உயரத்தை அடைந்த பௌட்டைப் பற்றி அவர் நண்பர்கள் என்ன சொல்லுகிறhர்கள்? அவர் ஒரு தபால் காரர் மாதிரி... உலகின் எந்த இடத்திற்கும் எத்தகைய பொருளானாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் எந்தவித பங்கமும் இன்றி சேர்ப்பிப்பார் என்று தான். எதைச் சேர்ப்பிப்பார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறென்ன...ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் தான்... இன்ன நாடென்று கிடையாது. தீர்க்க ரேகையும் அட்ச ரேகையும் சொல்ல வேண்டியது தான்.. ஆகாயத்திலிருந்து ஆயுத மழைதான்... ஆனால் காசை முன்னாடியே கட்டிவிடவேண்டும்.. வேலை அத்தனை சுத்தம்...அட்சர சுத்தம்..

சரி... எப்படி இவரால் இதைத் தொடரந்து சாதிக்க முடிகிறது? பிறகு எப்பிடி சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடிகிறது? முக்கியமான கேள்வியல்லவா... இனி பார்க்கலாம்..

ஏகே47, கிரனேடுகள், ராக்கெட் லாஞ்சர்கள், சி4 ரக வெடிமருந்துகள் (ஆர்டிஎக்ஸ் என்று சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்) மறறும இன்னபிற அதி நவீன ஆயுதங்கள் ஆகியவைகளை மொத்தமாக வாங்குபவர்களுக்கு இந்தப் பேரை தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. 1990க்கு பிறகு நிறையப் பேர் வாயில் புகுந்து புறப்பட்ட பெயர் இது. அத்தனை தொழில் சுத்தம். உங்களுக்கும,; நீங்கள் யாரை எதிர்த்துப் போராடுகிறீர்களோ அவருக்கும், இருவருக்குமே அடுத்தவருக்குத் தெரியாமல் வியாபாரம் செய்யும் தொழில் தர்மத்தை என்ன வார்த்தைகளால் எழுதுவது.... மேற்படியாருக்க பணம் தானே முக்கியம். யார் தாலியை யார் அறுத்தால் இவருக்கென்ன. அதற்குத்தான் ஏழைகளுக்கு உதவி செய்து விடுகிறhரே... வேலுநாயக்கர் ஞியாபத்திற்கு வந்தால் நான் பொறுப்பல்ல...

சரி இவரது சாதனைகளைப் பார்ப்போமா...

விக்டர் பௌட்டின் சொந்த கார்கோ விமானங்கள் காங்கோவின் காட்டிற்கிடையிலான ஒடுதளம் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானின் மலையோரம் மறைந்திருக்கும் ஓடுதளத்திலும் இறங்கி, தனது சேவைகளைச் செய்திருக்கின்றன. நான்கு கண்டங்களிலும் உலகளாவிய போக்குவரத்து கட்டமைப்பை நிறுவி, ஒருவொருக்கொருவர் அறியாவண்ணம் ஏற்படுத்தப்பட்ட இடைத்தரகர்களின் கட்டமைப்பிற்குள், நிதியுதவி செய்வோர், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தெரிந்து அல்லது தெரியாமல் ஆயுதம் தயாரிக்கின்ற அத்துனை நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது என்பது சாதராண விஷயமா என்ன... இதில் சரக்குப் போக்குவரத்தும் ஐநா சபையின் அமைதிக்காப்பாளர்களை ஏற்றிச் செல்லும் அற்புத பணியையும் செய்வது என்று ஒரு வித்தியாசமான மனிதர் விக்டர் பௌட்.

1990களில் இவரின் முதல் வாடிக்கையாளர், ஆப்கானிஸ்தானின் வடக்குக் கூட்டமைப்பின் தலைவர் சமதுதான்.. அதே சமயம் அவரை எதிர்க்கும் தாலிபான்களுக்கு விமானங்கள் சப்ளை செய்தவரும் இவரே... அங்கோல அரசிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவரும்.. அந்த அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் யுனிட்டா என்ற அமைப்பினருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவரும் அவரே... ஸhயர், லிபியா என்று இவர் கைவண்ணம் பலப்பல நாடுகளில்...

உங்களுக்கு இன்னேரம் ஒரு கேள்வி எழுந்திருக்குமே.. அமெரிக்கா எப்படி இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது?

அமெரிக்காவே இவரின் கஸ்டமர் என்றhல், பாவம் நீங்கள் என்ன தான் செய்வீர்கள்?

அமெரிக்க கருவூல அமைச்சு விக்டர் பௌட்டின் சொத்துக்களை முடக்குவதற்கு ஆதாரங்களையும் திரட்டும் போது தான் தெரிந்தது பெண்டகன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பல மில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தங்களை விக்டருக்கு அளித்து வந்தது. அது மட்டுமா, இதுவரை ஐநா சபைக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிப்பொருள்களை ஆப்ரிக்க நாடுகளுக்குக் கொண்டு செல்ல பலநு}று தடவை விமான சேவை புரிந்திருக்கிறார் விக்டர். இதில் வேடிக்கை என்ன வென்றhல் இவர் கொண்டு போய் இறக்கிய துப்பாக்கியை வைத்துத்தான் அங்கு பிரச்னை ஆகி, ஐநா அமைதிகாக்கும் படை போய் இறங்கி இருக்கும். ஒரு முறை புஷ் அறிவித்தாரே நினைவிருக்கிறதா... ஒன்று நீங்கள் அமெரிக்கா பக்கம்... அல்லது அமெரிக்காவின் எதிர்பக்கம் என்று.... விக்டர் இரண்டு பக்கமும் இருப்பவர்....

லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு எம்பி இவரின் பெயர் குறிப்பிட்டே புகார் செய்திருக்கிறார். அமெரிக்க உளவு விமானங்கள் இவர் தமது விமானத்தில் ஆயுதங்கள் ஏற்றுவதை கையும் களவுமாக போட்டோ எடுத்திருக்கின்றன. இன்டர்போல் இவருக்கு சிவப்பு சீட்டு அளித்துத் தேடிவருகிறது. ஆனால்.. இவர் மாஸ்கோவில், காலையில், நாயைச் சங்கிலியால் பிடித்துக் கொண்டு ஜhக்கிங் போய்க்கொண்டிருப்பார்...

இவரின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சற்றே விரிவாகப் பார்ப்போமா..?

(தொடரும்)