விளையாட்டுச் சண்டை: ப்ளே ஸ்டேஷனும் எக்ஸ்பாக்ஸ் ஒன்னும்

வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த சோனி ப்ளே ஸ்டேஷன் 4 (PS4) விற்பனைக்கு வந்து விட்டது. கடைகளின் வெளியே முதல் நாள் இரவிலிருந்து காத்துக்கிடந்த கணினி விளையாட்டுப் பிரியர்கள் 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பெட்டிகளை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

நவம்பர் 22 இன்று வெளிவந்து விட்ட எக்ஸ்பாக்ஸ் ஒன் (XBox One) கிட்டத்தட்ட இதே அளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன் தற்போது முந்தைய எக்ஸ்பாக்ஸ் 360ஐ விட அதிக அளவு வசதிகளுடன் வரவிருக்கிறது. ஆனால் 10 லட்சம் பெட்டிகளைத் தாண்டி விற்று சாதனை படைக்குமா என்று நாளை தான் தெரியும்.

வழக்கம்போல அஜீத்-விஜய் ரசிக மோதல்கள் போலவே, இணையத்திலும் பிஎஸ்4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள். வழக்கமான மைக்ரோசாஃப்டின் கண்டிப்பான கொள்கைகளால் வெறுத்துப்போன ரசிகர்கள் பிஎஸ்4ஐ தலைக்குமேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு கன்சோல்களையும் தொழில் நுட்பரீதியாக மற்றும் அதில் இருக்கும் வசதிகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், கிட்டத்தட்ட இரண்டும் விலை உட்பட, ஒன்றுக்கொன்று சோடை போகவில்லை. அப்படியென்றால் எதை வாங்குவது, எதை விடுவது? அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

பொழுதுபோக்கு அம்சம்:

ஹைடெஃபினிஷனில் கேம் விளையாடிக்கொண்டே, உடனே டிவியை இரண்டாவது திரையில் பார்த்தால் எப்படி இருக்கும்? கேபிள் டிவியை கேம் கன்சோல் வழியாகப் பார்த்துக்கொண்டு, ரிமோட் இல்லாமல் குரல் வழியாக சேனல் மாற்றினால் எப்படி இருக்கும்? (இது சாம்சங்கின் இன்டர்னெட் டிவிகளில் சாத்தியம் தான்.. ஆனால் ஒரு கேம் கன்சோலுக்கு கொடுக்கும் விலையை அதற்காக கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்குமே). இது எல்லாம் எக்ஸ்பாக்ஸில் உள்ளது, ஆனால் பிஎஸ்4ல் இல்லை. மற்றபடி, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் இரண்டிலும் உள்ளன. மிக முக்கியமாக எக்ஸ்பாக்ஸில் உள்ள ப்ளூரே டிவிடி ப்ளேயர், பிஎஸ்4ல் இல்லை.

விளையாட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுதல்:

பிஎஸ் வகையறாக்களில் ஒரு விளையாட்டு வட்டை ஒரு முறை வாங்கினால், அதை நண்பரிடம் கொடுக்க முடியும், விலைக்கு விற்க முடியும். யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எக்ஸ்பாக்ஸ்360 வரை அந்த மாதிரி செய்ய முடியாது. ஏனென்றால், அது எக்ஸ்பாக்ஸ் கன்சோலுடன் பதிவு செய்யப்படுகிறது, அந்த விளையாட்டு வட்டை ஓசி வாங்கிகூட வேறு எந்தக் கன்சோலிலும் பயன்படுத்த முடியாது. ஒரு முறை ஒருவர் வாங்கிய விளையாட்டு வட்டை வேறு ஒருவர் பயன்படுத்தவே முடியாது.  இது மைக்ரோசாஃப்டின் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால், எக்ஸ்பாக்ஸ் ஒன் முதல் இந்தத் தடை நீக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தப்பட்ட வட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். விற்கலாம். எனவே தற்போது பிஎஸ்4 அதை ஒரு முக்கியமான வித்தியாசமாக சொல்லிக்கொள்ளமுடியாது. 

கேமரா:

பிஎஸ்4 கேமரா தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும். கேமராவும் சேர்த்து வாங்கினால் அதன் விலை 500 டாலருக்கும் மேல் போய் விடுகிறது. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் கேமராவும் 500 ஜிபியும் சேர்த்து 499 டாலர்கள் தான். கேமரா இல்லாமல் 500 ஜிபி பிஎஸ்4 399 டாலருக்கு விற்கிறது.

இம்முறை கினக்ட் (Kinect) கேமரா 1080p துல்லியத்துடனும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்-குகளுடனும் வருகிறது. மேம்பட்ட திறனுடன் வரும் கேமராவால் உங்களின் மிகச்சிறிய அசைவைக் கூட துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மைக்குகள் இருப்பதால், உங்களின் குரலைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. இது பிஎஸ்4ல் ஒரு மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டுக்களைப் பதிவு செய்தல்:

இரண்டு கன்சோல்களிலும் பதிவு (Record) செய்யும் வசதிகள் இருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ளும் (Sharing) வசதிகள் இருந்தாலும், எக்ஸ்பாக்ஸில் கூடுதல் நேரம் பதிவு செய்ய முடிவதும். அதை எடிட் செய்து பதிவேற்றம் செய்யும் வசதியும் இருப்பது சிறப்பு. இந்த எடிட்டிங் வசதி, பிஎஸ்4ல் இல்லை, மற்றும் குறைந்த நேரம் மட்டுமே பதிவு செய்ய இயலுகிறது.

உட்கட்டமைப்பு:

இரண்டு கன்சோல்களும் ஒரே மாதிரியான ப்ராஸசர்களைப் (8 Core Processor ) பயன்படுத்தினாலும், மெமரியின் அளவும் (8GB RAM ) ஒரே அளவில் இருந்தாலும், மெமரியின் வேகம் பிஎஸ்4ல் அதிகம். அதனால், விளையாட்டுக்களைப் பொறுத்தவரையில் எக்ஸ்பாக்ஸ் 720p அளவு துல்லியத்தில் மட்டுமே சிறப்பாக வேலை செய்யமுடிகையில், பிஎஸ்4 1080p அளவு துல்லியத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகப் பார்க்கக்கிடைப்பது, நிச்சயமான ஒரு வித்தியாசம். மைக்ரோசாஃப்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது.

மற்ற விஷயங்கள்:

# ஸ்கைப் வசதி பிஎஸ்4ல் இல்லை. எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் 1080p வசதியுடன் ஒரே சமயத்தில் மூன்று பேருடன் பேச முடியும்.

# HDMI Pass-through டிவி வசதி பிஎஸ்4ல் இல்லை. அதுவும் குரலால் கட்டுப்படுத்தக்கூடிய வசதி எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் வரப்பிரசாதம்.

# காட்சித் துல்லியம் பிஎஸ்4ல் மிக நன்றாக இருக்கிறது.

# ப்ளூ-ரே விடியோ ப்ளேயர் இருப்பதால்,  எக்ஸ்பாக்ஸ் டிவிடி ப்ளேயராகவும் பயன்படுத்த முடியும். பிஎஸ்4ல் வெறும் விளையாட்டுக்கள் மட்டும் தான் விளையாட முடியும்.

# கூடுதல் வசதிகள் பெறவேண்டி வருடத்திற்கு இரண்டு கன்சோல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பிலான சந்தா கட்டவேண்டியிருக்கும்.

# இனி பிஎஸ்4 போலவே எக்ஸ்பாக்ஸ் ஒன்னிலும் தொடர்ந்து இணையத்தில் இருந்து விளையாட வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை உங்கள் அக்கவுண்டை பதிவு செய்ய இணையத்தில் தொடர்பு வைத்தால் போதுமானது. எனவே இப்போது இந்த வித்தியாசமும் இல்லை.

# விலை வித்தியாசமும் இல்லை (கேமராவையும் சேர்த்தால்).

மொத்தத்தில் பிஎஸ்4ல் விளையாட்டுக்களை மிகத் துல்லியாமான காட்சிகளுடன் அதிவேகமாக விளையாட முடியும். எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் விளையாட்டையும் தாண்டி அதை குடும்பத்தினருடன் களிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பலவகையிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இரண்டுமே இந்தியாவிற்குள் விற்கப்பட இன்னும் பல மாதங்களாகும் என்பது தான் கொஞ்சம் வருத்தமாயிருக்கிறது.

அமெரிக்க ஆயுதக்கப்பலும் சமீர் ஃபரஜல்லாவும்

சமீபத்தில் தூத்துக்குடிக்கருகில் சிக்கிய அமெரிக்க ஆயுதக்கப்பலைப் பற்றி ஆராய முற்பட்டபோது கிடைத்த தகவல்கள் சந்தேகங்களை அதிகரிக்கின்றன.

சமீர் பரஜல்லா (Sameer Farajallah) என்கிற புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர், சார்ஜாவில் கட்டிட பொருட்கள் வியாபாரம் நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். ஐக்கிய அரபுக் குடியரசில் பாலஸ்தீனியர்களுக்கு தனிச் சலுகை உண்டு. அதைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சமீருக்கு, தன் பொருளாதர வசதியை மேம்படுத்த பல்வேறு வகையிலும் முயன்று வந்தார். சார்ஜா ஆயுத வியாபாரிகளுக்கு ஒரு வகையில் வர்த்தகம் நடத்த ஏதுவாக தனது வர்த்தகக் கொள்கையை வைத்திருந்தது. 
 
தனக்கு பரிச்சயமான சில ஆயுத வர்த்தகர்களுடனான தொடர்பில்,  ஈராக்கில் நடந்த போரில் இருக்கும் மறைமுக ராணுவ வர்த்தகங்களால் பயன்பெற முடிவு செய்து, ஈராக்கின் மறு நிர்மாணம் என்ற பெயரில் கூட்டம் நடத்த, அமெரிக்காவில்  நியூ ஃபீல்ட்ஸ் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார். அக்கம்பெனியில் அவர் ஒருவர் மட்டும் தான் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கின் முக்கிய ராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்க நிறுவனங்கள், அரை மணி நேரம் சந்தித்து உரையாட 10,000 டாலர் வசூலித்த சமீரால், விசா பிரச்னைகளால் ஈராக்கிய அதிகாரிகளைக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் பணமும் திருப்பித் தரவில்லை. அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆசியுடன் நடந்த இந்த மறு புணரமைப்புக் கண்காட்சியில் வந்து ஏமாந்து போன அமெரிக்கர்கள் தான் அதிகம். ஆனாலும் தளரவில்லை, சமீர்.

பிறகு இதே நாடகம் லிபியாவிலும் மறு புணரமைப்பு என்ற பெயரில் நடந்தது.

இதில் எல்லாம் சரியான காசு பெயராமல் சலித்துப் போன சமீருக்கு வேறு வகையான யோசனை சொல்லப்பட்டது. 2010ல் அட்வான்ஃபோர்ட் என்கிற கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் சேவை தரும் நிறுவனம் ஒன்றை அமெரிக்காவில் ஒஹையோ மாகாணத்தில் ஆரம்பித்தார்.

கப்பல்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளின் கடற்படை வீரர்களைக் குறிவைத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தினார். எஸ்டோனியாவில் மாதம் 2000 ஈரோ தருவதாக வாக்கு கொடுத்தவுடன் 200 பேர் உடனடியாக கடற்படையிலிருந்து விலகி வேலைக்கு சேர்ந்தார்கள். எஸ்டோனியக் கடற்படை, ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாற ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 ஈரோ வீதம் பாதுகாப்பு தரப்படும் கப்பல்களிடமிருந்து வசூலித்து விடுவார். அப்படியென்றால், 200 பேருக்கு லாபமென்ன என்று கணித்துக் கொள்ளுங்கள்.

இந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் வேண்டுமே... அதைப் பெறுவதில் முறையான வழிமுறைகளை இந்த நிறுவனம் கையாளவில்லை. ஏனென்றால் அதற்கான ஆலோசனை சொல்ல சரியான ஆட்கள் இல்லை அவரிடம். ஒரு முறை, அமெரிக்க மாகாணமொன்றில் தனிப் பயன்பாட்டுக்கு என்று மொத்தமாக ஆயுதம் வாங்கி கப்பலுக்கு அனுப்பி விட்டனர். தாமதமாக மோப்பம் பிடித்த உளவு அமைப்புகள், விவரம் கேட்க, சமீரின் மகன் தான் வாங்கியதாகக் கூறி, ஜெயிலுக்குப் போனார். இரண்டரை வருடங்கள் கம்பெனி செயல்பட தடை விதிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் தான் மீண்டும் அமெரிக்காவில் அக்கம்பெனி செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் தொடர்ந்து செயல்படும் பொருட்டு, தனது கம்பெனியின் தலைமைக் கேந்திரத்தை லண்டனுக்கு மாற்றிவிட்டு தொடர்ந்து தனது தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இம்முறை புத்திசாலித்தனமாக கேப்டன் வில்லியம் வாட்சன் என்பவரை தனது கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார், சமீர். இது ஒரு அமெரிக்கக் கம்பெனி என்கிற தோற்றத்தை தந்தது.

அந்த எஸ்டோனிய படைவீரர்களுக்கும் சரியாக சம்பளம் கொடுக்க வில்லை. ஏன், வேலை செய்வதற்கான ஒப்பந்தம் கூட வழங்கப்பட வில்லை. இதனால், நிறையப் பேர் விலகி விட்டனர். அதனாலென்ன,  ரோமானியா, உக்ரைன், என ஏழை நாடுகள் நிறைய இருக்கின்றனவே.

பாருங்கள், இம்முறை எஸ்டோனியர்களும், உக்ரேனியர்களும், இந்தியர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, இந்தக் கப்பல் கடல் கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டு விட்ட வங்காள விரிகுடாவில் என்ன செய்கிறது?

இலங்கையிலிருந்து ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்லும் பல கப்பல்களுக்கு இந்தக் கம்பெனி இதற்கு முன் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. இம்முறை யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வந்தார்கள் என்கிற கேள்வியும், இந்தக் கப்பல் ஆயுதங்கள் கடத்தி செல்லும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் சமீபகாலமாக இலங்கையில் அதிகரித்திருப்பதும், இந்தக் கப்பலின் நடமாட்டமும், இந்தப் பிரச்னையை தீர அலச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதற்கான விடையை, ரா அமைப்பு ஒரு வேளை கண்டுபிடிக்கக் கூடும்.
 
Reference:
1.  http://news.err.ee/6082c763-d9b3-4458-abce-5dc727697cb1
2. http://www.papt.org.ph/news.aspx?id=...d=115&paging=1
3. https://www.duedil.com/director/915541851/samir-farajallah