உலகமயாகும் உணவுப் பஞ்சம் - 2


அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள், ஆனால், அது தான் உண்மை. அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது. ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது. ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை. ஏன் இந்த வீழ்ச்சி வந்தது என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தோமானால், விடிந்து போய்விடும். அதை தனியாக ஒரு பதிவாகப் போடலாம்.

எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கடன் பிரச்னையில் பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் சிக்கிக் கொண்டுள்ளன. 600 பில்லியன் டாலர் கடன் வீடுகளின் மேல் வராக் கடனாகப் போய் அடைந்து விட்டது. இது வரை 150 பில்லியன் டாலர்தான் நட்டமாக காட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள 450 பில்லியன் டாலர் நட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும். மொத்தமாக காட்டினால், பேங்க் திவாலாகும் என்று சொல்வார்களே அது நடக்கும். இங்கு ஒரு நாட்டின் நாணயமே திவாலாகிப் போகும். ஆகையால், வங்கிகள் சிறிது சிறிதாக நட்டம் காட்டுவார்கள். ஆனால், வீட்டிற்காக கடனாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் வேறு யாரிடமோ, எங்காவது இருந்து தான் ஆக வேண்டும் இல்லையா. அந்தப் பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டிருந்தால், கரைந்துதானே போகும். எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்வது என்று ஒரு பெரிய கூட்டமே வால்ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்தார்கள். 1960களிலேயே சிலபேர் கம்மோடிட்டீஸ் எனப்படும் மரபு சாரா நிதித்துறை முதலீடுகளில் (Non-traditional investment instruments) முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தனர். அதன் வளர்ச்சி, தங்கத்தின் மூலம் மட்டுமே பிரமிக்கத் தக்கதாக இருந்தது. தங்கம் மட்டுமல்லாது உணவுப் பொருள்கள், உற்பத்தி மூலப் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களிலும் அவர்கள் ஃப்யூச்சர்ஸ் (FUTURES) என்ற வகை முதலீட்டைச் செய்திருந்தனர். எக்காலத்திலும், அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. டாலர் போகும் போக்கைப் பற்றி அறிந்த, (சாதாரண மாதச்சம்பளம் வாங்குபவனுக்கெல்லாம் புரியாத விஷயமது), நெளிவு சுளிவு தெரிந்த அந்த நிபுணர்கள், நெருப்பில் மாட்டிய புழுபோல் தவித்தனர். எப்படியாவது, தமது நிறுவனத்தின் பணத்தை சரியான அளவில் முதலீடு செய்து போனஸ் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய அடிப்படை நோக்கம். வீழ்ந்து வரும் டாலரால் ஏற்படப் போகும் நஷ்டத்தைச் சரிகட்ட முயற்சிக்கும் பரபரப்பு அது.

ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளை வருங்காலத்தில், அதாவது இன்ன தேதியில், இன்ன அளவிற்கு, இந்த விலை என்று ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஐந்து வருடத்திற்கு முன்போ கணிப்பது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பொருளின் விலை, மேற்படி விலையை விட கூடுதலாக மார்க்கெட்டில் விற்குமேயானால், அந்த பத்திரத்தை விற்றவர், சொன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும். வாங்குபவர் சந்தையில் கிடைக்கும் கூடுதல் விலையின் வித்தியாசத்தில் கொள்ளை லாபம் பார்ப்பார். அதாவது, 2008 ஏப்ரல் மாதம் 30ம் தேதி, அரிசி ஒரு குவிண்டால், ஆயிரம் ருபாய் விற்கும் என்று, 10,000 டன்னுக்கு ஆறு மாதம் முன்பே அதாவது 2007 நவம்பர் 30ம் தேதியே, 10 ஆயிரம் டன்னுக்கான பணத்தை வங்கியில் கட்டி அல்லது அதன் 10 சதத்தை கட்டி (மீதத்தை வங்கி செலுத்தும்) அதை வாங்கிக் கொள்வது. நவம்பர் மாதத்தில் அரிசியின் விலை 700 ருபாயாக இருக்கலாம். அதனால், விற்றவர் நினைப்பார், நாம் 300 ருபாய் லாபத்திற்கு இதை விற்றிருக்கிறோம் என்று. ஆனால், ஏப்ரல் மாதத்தில் (எப்படியோ) அதன் விலை 1500 ருபாயாக ஆகிப் போயிருக்கும். வாங்கியவருக்கு 500 ருபாய் ஒரு குவிண்டாலுக்கு லாபம். விற்றவருக்கு லாபத்தில் தான் நட்டம். அப்படியென்றால் எத்தனை கோடி லாபம்? இதில் லாபம் தரக்கூடிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பொருளுக்கு விலை ஏறியிருந்தால் தான். இல்லையென்றால் நட்டப் பட வேண்டிவரும். லாபம் வர வேண்டுமானால் விலை ஏற வேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு பொருளின் விலை ஏறும். இப்போது இந்த விளையாட்டில் தட்டுப்பாடு எப்படி முக்கியக் காரணியாகிறது என்று புரிந்திருக்குமே?

ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு தனி நபர், இந்த அளவிற்கு போனஸ் பெற்றால், அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்திருக்கும். சம்பாதித்த பணம், வேறு எங்கு செல்லும்? மீண்டும், அதே விளையாட்டிற்குத் தான்.

பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதிசெய்ய் அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். மலேசியாவில் ஒரு மாநிலத்தில் பல பில்லியன் டாலர் ஒதுக்கி, அரிசி விளைச்சலை அதிகரிக்கப் போகிறார்கள். உணவுப் பொருள் இறக்குமதிக்கெல்லாம் வெளிநாடுகளையெல்லாம் நம்பி இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

மேற்படி நிதித்துறை விளையாட்டு ஒரு காரணம் தான் என்றாலும், உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தரும் பணத்தால், விவசாயம் செய்வது என்பது அருகி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொருந்தும். 7 சதவீத விளைநிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த இரு நாடுகளும் பெரும்பான்மையான உணவுத் தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றிருந்தன. WTO என்பது ஒரு வகையில் வரப்பிரசாதம்தான். ஆனால், உள்நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, உணவுப் பொருட்களை எந்த நாடாவது ஏற்றுமதி செய்ய முடியுமா? விவசாயம் பார்க்க மக்களுக்கு மனநிலை இல்லை. இயந்திரமயமாதல்தான் ஒரே வழி. ஆனால், உழுக நிலம் வேண்டுமே? விவசாய நிலம் எல்லாம் வீடாகிக் கொண்டிருந்தால், என்ன செய்வது?

பயோப்யூவல் எனப்படும் உயிர்மஎரிபொருள், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த எரிபொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியாததால் இந்தத் துறை பின்தங்கியிருக்கிறது என்று முதலீட்டாளர்கள் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது எண்ணெய்ப் பீப்பாய் விற்கும் விலையைக் கண்டால், அதைவிட குறைந்த விலையில் உற்பத்தி செய்து அதிக லாபம் பார்க்க முடியும் என்று, உயிர்ம எரிபொருள் கம்பெனிகளின் பின்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். சோளத்திலிருந்து, சோயாவிலிருந்து, ஏன் பாமாயில் கூட உயிர்ம எரிபொருள் தயாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால், மனிதன் சாப்பிடத் தேவையான உணவு வகைகள் விலை உயர்ந்து போவதை யாராலும் தடுக்க இயலவில்லை.

லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும். பங்குச் சந்தை நிதித்துறையில் வேலை பார்ப்பவர்கள், லாபத்தை மட்டுமே மனதிற்கொண்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இல்லாமல் ஆடுகின்ற இந்த ஆட்டம், அப்பாவி ஏழைகளை உலகெங்கும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறது. உணவுப் பஞ்சத்தையும் உலகமயமாக்கியிருக்கின்ற இந்தக் கொடுமை எப்பொழுது நிற்கும்? பசிக் கொடுமை தவிர்க்க முடியாத தடுக்க இயலாத புரட்சிகளைக் கொண்டு வந்து, ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்டிருப்பதை வரலாற்றின் ஏடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஒரு முறையல்ல, இரு முறையல்ல, நூற்றாண்டுகள் தோறும் இது நடந்திருக்கிறது.

இந்தச் சூழலில், அரிசியை இரண்டு ருபாய்க்கு தமிழக அரசு தருவதை, நாம் நன்றிக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

உலகமயமாகும் உணவுப் பஞ்சம்



இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம். பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.

ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர். அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.

மத்தியகிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன. துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது. இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.

இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).

அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது. இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.

இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது. அதைப்பற்றி அடுதத பதிவில் விரிவாக பார்க்கலாம்.


(தொடரும்)

தீப விளையாட்டும் திபெத்தும்

ஒலிம்பிக் தீபம் செல்லும் வழியெல்லாம் போராட்டம். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு முக்கியமான கால கட்டம். ஒரு நாடு பொதுவாக மற்ற நாடுகளை பங்குபெறச்செய்து பெருமையுடன் நடத்தும் புராதான உலக விளையாட்டை மற்ற நாடுகள் இவ்வளவு அலட்சியமாக இதற்கு முன் நடத்தியதில்லை.

தீபம் அணைவதற்கு அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் ஒரே காரணம், திபெத். குறிப்பாக, சீனாவின் மீதான திபெத் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்.

நாடு கடந்து அகதிகளாக பெரும்பாலோர் வசிக்கும் திபெத்தியர்களுக்கு ஊக்கம் தருவது யார்? ஒவ்வொரு நாட்டிலும் போலீஸ் முடிந்தவரை தீபம் அணையும் வரை கண்டும் காணாமல் இருப்பதற்கு பின்னணியில் இருப்போர் யார்? ஒலிம்பிக் போட்டிக்கு முடிந்த வரையில் இடைஞ்சல் தர சிலர் பிரயத்தனப்படுவது ஏன்? இப்படியெல்லாம் உங்களுக்கு மனதிற்குள் கேள்வி இருந்தால், வாருங்கள், அலசித் தெரிந்து புரிந்து கொள்ளலாம்.

உலகின் மிக உயரமான மலை உச்சி எவரெஸ்ட் இந்தியாவில் இருப்பதாக எனக்குப் பாடப் புத்தகத்தில் படித்ததாக நினைவு. உண்மையில், எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான பகுதிக்குள் இருக்கிறது. ஆக இந்தியாவிற்கும் எவரெஸ்டிற்கும் சம்பந்தமில்லை. திபெத்தை சீனா உரிமை கொண்டாடுவதால், நியாயமாக எவரெஸ்ட சிகரம் சீனாவில்தான் இருக்கிறது. திபெத்தில் தான் இருநூறு கோடிப் பேருக்கு மேல் உள்ள நாடுகளில் ஓடும் 7 வற்றாத ஜீவ நதிகள் உற்பத்தியாகின்றன. தலைக்காவிரியைக் கொண்டிருக்கும் கர்நாடகாவிடம் ஒரே நாட்டிற்குள் இருந்து கொண்டு நாம் படும் பாடை நினைத்துப் பார்த்தால், திபெத்தை உரிமை கொண்டாடும் நாடு, நாளைக்கு ராயல்டி கேட்டால் என்ன நடக்கும்? வேறென்ன, நேரடியாக உலகப் போர்தான்.

மேற்படி காரணங்களில் இந்திய வெளியுறவுத்துறை புத்தர் தோன்றிய நாடு என்கிற உரிமையில் தலாய் லாமாவிடம் மிகவும் நெருக்கம் வைத்துக் கொண்டது. அமெரிக்கா, அங்கு ஒரு படைத்தளத்தை நிறுவிக்கொள்ள தனிநாடு கோரிக்கையை முன் வைக்க, இரண்டு நாடுகளுக்கும் சீனா ஆப்பு வைக்க தலாய் லாமா தப்பித்து ஓடினார். இந்தியா, தர்மஸாலா என்ற இடத்தில், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. இன்று வரை அவர் தனது மறைமுக திபெத்திய அரசை அங்கிருந்து தான் நடத்துகிறார். அதே சமயம், 1960களிலிருந்தே சிஐஏ விடமிருந்து மாதத்திற்கு 15000 டாலர் வரை ஊதியமாக பெற்று வந்திருக்கிறார்.

ஆக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் திபெத்தின் மீது ஒரு கண். இந்தியாவிற்கு எல்லை சார்ந்த பிரச்னை. அமெரிக்காவிற்கோ, சீனாவிற்கு தலைவலி கொடுக்க ஒரு சரியான களம். அமெரிக்காவின் NED (National Endowment for Democracy) என்ற சிஐஏவின் மறைமுக அமைப்பு ஒன்று பல்வேறு நாடுகளில் எதிர்க்கட்சிகளையோ, சிறு சிறு குழுக்களையோ தூண்டி அவ்வப்போது பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. நேரடியான பிரச்னைகள் இல்லாமல், தனித்தமிழ்நாடு கேட்டு ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் குண்டுகளை வெடிக்கச் செய்யும் போதெல்லாம் என்னவோ இந்த மாதிரியான அமைப்புகள் மறைமுகமாக பொருளாதார உதவி செய்கின்றனவோ என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றன. சமீபத்தில் மியான்மரில் நடந்த புத்த பிக்குகளின் போராட்டம் உட்பட, சீனாவின் டியான்மென் சதுக்கத்தில் ராணுவ கவச ஊர்தி ஒன்றின் முன் மாணவன் ஒருவன் உயிர் விட்ட சம்பவம், சீனாவின் பாலுன் கோங் (Falun Gong) என்ற அமைப்பை வெளிநாடுகளில் வளர்த்து வருவது, ஜார்ஜியாவில் ரஷ்யாவிற்கு எதிராகப் போராட்டம் என்று (இந்தியாவில் உள்ள சம்பவங்களை இங்கு குறிப்பிட்டால், பல பேர் பொங்கி எழக்கூடும். எனவே, வேண்டாமே, ப்ளீஸ்...) இந்த அமைப்பின் கைங்கர்யங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் அமெரிக்காவின் பிந்தைய 50 ஆண்டு வெளியுறவுக் கொள்கையின் பிரதானக் கொள்கையாக இருக்கும் அந்தக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது

“If you control the oil, you control entire nations…” - Henry Kissinger

உலகின் மிகப் பெரிய வளரும் நாடுகளில் அதிகமாக எண்ணெய் வளத்தை நம்பி உள்ள நாடு, சீனா. சீனாவின் வர்த்தகரீதியான வளர்ச்சி அதிகரித்த போதெல்லாம் அமெரிக்கா கவலைப்படாமல் இருந்ததற்குக் காரணம். யார் எண்ணெய் வாங்கினாலும், அமெரிக்க டாலரில்தானே வாங்கியாக வேண்டும். டாலர் அச்சிடும் செலவிற்குள் எண்ணெயை ஏறக்குறைய இலவசமாக அமெரிக்கா பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், மற்ற நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும் என்ற கணக்கில் இது நாள் வரை பொழுது ஓடியது. புத்திசாலித்தனமாக சீனா என்ன செய்தது என்றால், அந்நியச் செலாவணியாகக் கிடைத்த டாலரையெல்லாம் அமெரிக்காவிலேயே முதலீடு செய்தது. அதாவது பாண்டுப் பத்திரங்களாகவும் மற்றும் ஏனைய அமெரிக்க நிதியமைச்சு சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்தது. அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு எதுவும் ஏற்றுமதி ஆகாததால், ஏறக்குறைய 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை இன்றைக்கு சீனா வைத்திருக்கிறது. சீனா அவற்றைக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்க முன்வந்தால், அமெரிக்கர்கள் எல்லாம், 1997ல் இந்தோனேசியாவில் ருபியாவை மூட்டை கட்டிக்கொண்டு போய் டீக்குடித்த மாதிரி அமெரிக்க டாலரை மூட்டை கட்டி எரித்துக் குளிர் காயவேண்டியது தான். ஏனென்றால், அடுப்புக்கரியை டாலர் கொடுத்து வாங்கி எரிப்பதை விட நேரடியாக டாலரை எரித்தால் காசு மிச்சமாக இருக்கும். இது போக மத்திய கிழக்கு நாடுகள், எண்ணெய் வர்த்தகத்தை ஈரோவில் நடத்தப் போவதாக பேசத் தொடங்கியிருக்கின்றன. சதாம் உசேன் அப்படிப் பேசப் போய்த்தான், இறைவனடி போய்ச் சேர்ந்தார். ஈராக் மக்கள் அனுபவிக்கின்றனர். ஈரான் சந்தடிச் சாக்கில் எண்ணெய்ச் சந்தை ஒன்றை ஆரம்பித்து அதில் ஈரோவை முன்னிறுத்தி வர்த்தகத்தை ஆரம்பித்தே விட்டது. ரஷ்யா அதன் முதல் கஸ்டமர். விரைவில், அபுதாபிக்கருகில் உள்ள வளைகுடாவில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கக் கூடும்.

சீனா ஒழுங்காக அமெரிக்க டாலரில் எண்ணெய் வாங்கிக் கொண்டிராமல், தாமே எண்ணெய் தோண்டி எடுத்துக் கொள்ளப் புறப்பட்டது அமெரிக்காவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கிஸ்ஸிங்கரின் அடிப்படைக் கொள்கையையே அது ஆட்டிப் பார்க்கிறது. அதனால்தான் சீனா எண்ணெய் தோண்டிக் கொண்டிருக்கும் டார்புர் நகரில் மனித உரிமைப் பிரச்னை என்று உலகளாவிய விவாகரங்களாக கிளப்பிக் கொண்டிருந்தனர். இந்தியாவிற்கும் இதே பிரச்னை இனி வரலாம். அதென்னமோ தெரியவில்லை, எங்கெல்லாம் இந்தியாவும் சீனாவும் போட்டி போடுகின்றனவோ, அங்கெல்லாம் சீனாவே அதி முக்கியமான பாகத்தைப் பெற்றுக் கொண்டு, அவ்வளவு சிறப்பில்லாத பாகத்தை இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்து வருகின்றது. இதோ அருகாமையில் இருக்கும் மியான்மரே ஒரு உதாரணம். [இந்திய வெளியுறவுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம்.] இது ஏன், மத்திய கிழக்கிலிருந்தும், காஸ்பியன் பகுதிகளிலிருந்தும் தரை மார்க்கமாக சீனாவிற்கு குழாய் வழி எண்ணெய் எடுத்துச் செல்லும் திட்டம் முழு வடிவம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அக் குழாய் வழி செல்லும் உஸ்பெகிஸ்தான், கஸகஷ்தான், கிரகிஸ்தான் போன்ற பகுதிகள் ரஷ்யாவை உடைத்து தனி நாடுகளாக்கப்பட்டன. அவை அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களாகவும் ஆயின.

திபெத் போதாதென்று, திபெத்திற்கு அருகாமையில் சீனாவிற்குள் இருக்கும் தனியாட்சிப் பிரதேசத்தில் வசிக்கும் சீன முஸ்லிம்களான உய்குர் இன மக்களை பாகிஸ்தானில் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கும் கைங்கர்யத்தையும் செய்து வருகிறது. சமீபத்தில் கூட விமானம் ஒன்றைக் கடத்தியதாக சிலர் சீனாவில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆகவே, அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கு சீனாவால் பங்கம் வரும் என்ற பயத்தாலும், அதிகப்படியான டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடாக சீனா இருப்பதாலும், அமெரிக்காவிற்கு சீனாவை மிரட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதே சமயம், இந்த மாதிரியான பல பிரச்னைகளைப் பார்த்த சீனா நாடு, பல்லைக் கடித்துக் கொண்டு ஒலிம்பிக்ஸை எப்படியாவது அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்தி விட மிக உறுதியாக இருக்கிறது. இவ்வருடக் கடைசியில், அதாவது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் முடிவுற்ற கையோடு, உலகளவில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மாற்றம் வரலாம். அதில், சந்தேகமில்லாமல் பாதிக்கப்படப்போவது அமெரிக்கா தான். அதே சமயம் அந்த மாற்றத்தால் பயனடையப் போகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.